அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த தமிழ் குடும்பத்தின் நிலை !

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த நடேசலிங்கம் – பிரியா என்ற ஈழத் தமிழ் குடும்பத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை இலங்கைக்கு நாடுகடத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், நாடுகடத்தும் முடிவை திரும்ப பெற முடியாது என அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீட்டர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடையே பேசிய பீட்டர் டட்டன் “அக்குடும்பம் நீதிமன்றத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதில் அனைத்திலுமே அவர்கள் அகதிகள் இல்லை என அறியப்பட்டது” எனக் கூறியுள்ளார்.

“காணாமல் போதல் சம்பவங்கள் இன்றும் நிகழ்கின்றன. தமிழ் மக்களுக்கு எதிராக சித்ரவதை நடக்கும் சூழலில், தமிழர்கள் எவரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது,” என தமிழ் அகதிகள் கவுன்சலின் பிரதிநிதி அரண் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த டிசம்பர் 2018 இறுதியில் தஞ்சம் கோரிய இலங்கைத் தமிழ் குடும்பத்தின் மேல்முறையீட்டு மனுவை அவுஸ்திரேலிய நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நிராகரித்திருந்தது.

அதே சமயம், பிப்ரவரி முதலாம் திகதி வரை இவர்களை இலங்கைக்கு நாடுகடத்தக்கூடாது என தீர்ப்பாயத்தின் நீதிபதி ஜான் மிடில்டோன் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த 2012யில் படகு வழியாக அவுஸ்திரேலிய சென்ற நடேசலிங்கமும், 2013 யில் படகு வழியாக ஆஸ்திரேலியா சென்ற பிரியாவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

குயின்லாந்த்தில் உள்ள பிலோயலா (Biloela) என்ற சிறுநகரில் கடந்த நான்கு ஆண்டுகளாக வசித்து வந்த அவர்களுக்கு கோபிகா, தருணிக்கா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில், கடந்த மார்ச் 2018யில் பிரியாவின் இணைப்பு விசா(Bridging Visa) காலாவதியாகியதாக ‘பிரியா- நடேசலிங்கம்’ என்ற இணையரின் வீட்டிற்கு அதிகாலையில் சென்ற அவுஸ்திரேலிய எல்லைப்படை, அவர்களை கைது செய்தது.

அதைத் தொடர்ந்து, பிரியா மற்றும் நடேசலிங்கத்துடன் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரு குழந்தைகளும் இலங்கைக்கே நாடுகடத்தப்படுவார்கள் எனக் கூறப்பட்டது.

பிலோயலா நகரில் வசித்து வந்த அவுஸ்திரேலியர்களின் கோரிக்கைகள் மற்றும் போராட்டத்தைத் தொடர்ந்து அவர்கள் நாடுகடத்தப்படுவதிலிருந்து தற்காலிகமாக மீட்கப்பட்டனர்.

அதன் பின்னர், நாடுகடத்தலுக்கு எதிராக அகதிகள் தீர்ப்பாயம் மற்றும் கீழ் நீதிமன்றத்தில் எடுத்து முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.

அந்த தீர்ப்பாயம் மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை அவுஸ்திரேலிய நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் நிராகரித்துள்ள நிலையில், விரைவில் அவர்கள் நாடுகடத்தப்படக்கூடும் எனக் கூறப்படுகின்றது.