தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் எண்ணம் எமக்கில்லை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் எண்ணம் எமக்கில்லை என தமிழ் மக்கள் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

தமிழ் மக்கள் கூட்டணியின் அங்குரார்ப்பண மத்திய குழுக் கூட்டம், யாழ்ப்பாணத்தில் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமக்கு எந்தவொரு கட்சியையும் பிளவு படச்செய்வதற்கு விருப்பமில்லை.

ஈ.பி.ஆர்.எல்.எஃப், கஜேந்திரன் பொன்னம்பலம் ஆகியோர் ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள். எனவே எந்த விதத்திலும் இப்போது இருக்கின்ற கூட்டமைப்பை பிளவுபடுத்தவில்லை. அதேபோல் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் அவசியமும் எமக்கில்லை.

இதனிடையே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் சித்தார்த்தனின் கட்சி அங்கிருந்துகொண்டு எங்களுடன் இணைவதை ஏற்கவில்லை. அவர் கொள்கை ரீதியாக இணைந்து செயற்பட்டாலும் கட்சி ரீதியாக இணையவேண்டிய அவசியம் அவருக்கும் இல்லை, எங்களுக்கும் இல்லை. நாம் எமது கட்சியில் கொள்கை ரீதியாகவே இணைக்கின்றோம்.

இதேவேளை எமது கொள்கையை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதும், கூட்டமைப்பின் கொள்கையை ஏற்பதும் மக்களிக் கைகளிலேயே உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.