அவுஸ்திரேலியாவில் அகதிகள் தடுப்பு முகாமில் போராட்டம்!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் அகதிகள் தடுப்பு முகாமில் தடுப்பில் உள்ள நூற்றுக்கணக்கானவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி இருப்பதாகவும், அத்தோடு அதிகாரிகள் தம்மை கைதிகள் போன்று நடாத்துகின்றனர் என்றும் போராட்டக்காரர்கள் கூறியுள்ளதாக தெரிவருகிறது.

மெல்பேர்னில் இருந்த தடுப்பு முகாம் (MIDC) சமீபத்தில் மூடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மெல்பேர்ன் பகுதியிலுள்ள இடைத்தங்கல் முகாம் எனப்படும் Melbourne Immigration Transit Accommodation நிலையத்துக்கு அங்கிருந்த அகதிகள் கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே மேற்குறித்த கோரிக்கைகளை முன்வைத்து உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் சுமார் இருநூறு பேர் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது..

தடுப்பு முகாமில் உள்ள மேசை கதிரைகள் எதுவுமே சரியில்லை என்றும் இரவில் எழுந்து வெளியில் போகும்போது அதிகாரிகள் கூடவே வருகிறார்கள் எனவும் அங்குள்ளவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குடிவரவு திணைக்கள அரிகாரிகளுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.