யுத்தத்தின் வடுக்கள் : ஒட்டுசுட்டான் பகுதியில் தொடரும் அவலம்..!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பனிக்கன்குளம் கிழவன்குளம் போன்ற பகுதிகளில் வாழும் அதிகளவான குடும்பங்கள் தொழில் வாய்ப்பின்றியும் வருமானங்கள் இன்றியும் காட்டில் விறகு வெட்டியே தமது வாழ்வாதாரத்தை கொண்டு வாழ்ந்து வருதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் கால் ஒன்றை இழந்த நான்கு பெண்குழந்தைகளின் தந்தையான  பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் வறுமையால் மிகவும் கஷ்டத்திற்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியார் தெரிவித்தார்.

கிழவன்குளம் கிராமத்தில் வாழ்ந்து வரும் நான்கு பெண்குழந்தைகளின் தந்தையான  பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் யுத்தத்தில் ஒரு காலை இழந்தநிலையில் அவரும் அவரது குடும்பமும்  தினமும் காட்டிற்குச்சென்று விறகு வெட்டி அதனை வீதியில் வைத்து விற்பனை செய்வதன்மூலம் கிடைக்கும் வருமானத்தைககொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

இதேவேளை இவர்களுக்கான அடிப்படைவசதிகள் எதுவும் கிடைக்காத நிலையில் தற்காலிக வீடொன்றிலே வாழ்ந்து வருகின்றனர்.

ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட இக்குடும்பம் நிம்மதியாக வாழ்வதற்கு நிரந்தரமாக ஒரு வீடின்றியும் மின்சார வசதி மலசலகூட வசதி குடிநீர் வசதி எதுவுமே இல்லாத நிலையில் மிகவும் துன்பத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில்,  குறித்த குடும்பத்திற்கு பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்டுள்ள பங்கீட்டு அட்டையில் நிரந்தர வீடு, மலசலகூடம் என்பன வழங்கப்பட்டுள்ளதாக காட்டப்பட்டுள்ளபோதும், அவை எதுவும், அவர்களிடம் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.

புதிய கல்வி ஆண்டில் பாடசாலை ஆரம்பிக்கவுள்ள நிலையில் பாடசாலைக்கான கொப்பி, புத்தகங்களைக்கூட வாங்கமுடியாத நிலையில் தாம் வாழ்ந்து வருவதாகவும் மேற்படி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்தெரிவித்துள்ளனர்.

நாங்கள் நிம்மதியாக இருப்பதற்கு வீடின்றியும்  எனது பிள்ளைகளை  பாடசாலை அனுப்புவதற்கு கொப்பி புத்தகங்களை  வாங்குவதற்குக்கூட வழியின்றியும் அன்றாடம் உணவிற்காகவும் கஷ்டப்பட்டு விறகு வெட்டி  வாழ்ந்து வருவதாக பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன்  தெரிவித்துள்ளார்.