முல்லைத்தீவில் கடும் மழை! வயல் நிலங்கள் சேதம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பெய்யும் கன மழைகாரணமாக, காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட பல்லாயிரக் கணக்கான வயல் நிலங்கள் சேதமடைந்துள்ளதுடன், சில குளங்கள் உடைப்பெடுக்கும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.

முல்லைத்தீவு கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் காணப்படும், மொத்தம் 9679 ஏக்கர் காலபோக நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயற்காணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 05 குளங்கள் ஆபத்தான நிலையிலுமுள்ளதுடன், ஒரு நீர்ப்பாசன வாய்க்காலும் சேதமடைந்துள்ளது.

மேலும் ஒலுமடு கமக்கார அமைப்பிற்குட்பட்ட 675 ஏக்கர் வயல் நிலங்களும், முள்ளியவளை கமக்கார அமைப்பின் கீழ் காணப்படும் 750 ஏக்கர் வயல் நிலங்கள், ஒட்டுசுட்டான் கமக்கார அமைப்பின்கீழ் 1656ஏக்கர் வயல் நிலங்கள், துணுக்காய் காமக்கார அமைப்பின் கீழ் 700ஏக்கர் வயல் நிலங்கள், பாண்டியன்குளம் கமக்கார அமைப்பின் கீழ் 500ஏக்கர் வயல் நிலங்கள், புதுக்குடியிருப்பு கமக்கார அமைப்பின் கீழ் 4000 ஏக்கர் வயல் நிலங்கள், உடையார் கட்டு கமக்கார அமைப்பின் கீழ் 1000ஏக்கர் வயல் நிலங்கள், குமுழமுனை கமக்கார அமைப்பின் கீழ் 250ஏக்கர் வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பின் கீழ் காணப்பட்ட வயல் நிலங்கள் ஏற்கனவே பெய்த மழைகாரணமாக அழிவடைந்துவிட்டன.

அத்துடன் ஒலுமடு கமக்கார அமைப்பின் கீழ் காணப்படும் புலிமச்சினாதிகுளம், ஒலுமடுக்குளம், தாச்சரங்கன்குளம், முறியாக்குளம் என்பன குளக்கட்டிற்கு மேலால் வெள்ளம் மேவிப் பாய்ந்துள்ளது.

ஒட்டுசுட்டான் கமக்கார அமைப்பின் கீழ் காணப்படும், அம்பகாமம் குளம் குளக்கட்டால் நீர் கசிகின்றது.

மேலும் முள்ளியவளை வடக்கு பகுதியில் நீர்ப்பாசன வாய்க்கால் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.