மெல்போர்னில் சதம் அல்லது இரட்டை சதத்திற்கு வாய்ப்புள்ளது!-ரகானே

முதல் இரண்டு டெஸ்டிலும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரகானே, மெல்போர்னில் சதம் அல்லது இரட்டை சதம் அடிக்க வாய்ப்புள்ளது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டு டெஸ்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. பெர்த்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இரண்டு டெஸ்ட் போட்டியிலும் ரகானே அரைசதம் அடித்தார். அடிலெய்டில் 2-வது இன்னிங்சிலும், பெர்த்தில் முதல் இன்னிங்சிலும் அரைசதம் அடித்தார். அவரால் அரைசதத்தை சதமாக மாற்ற முடியவில்லை. இந்நிலையில் மெல்போர்னில் டெஸ்டில் சதம் அல்லது இரட்டை சதம் அடிக்க வாய்ப்புள்ளது என்று ரகானே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘சதம் வந்து சேரும். மெல்போர்ன் டெஸ்டில் அடிப்பேன் என்பதில் அதிக நம்பிக்கை உள்ளது. என்னுடைய மனநிலை எப்போதுமே கவுன்ட்டர்-அட்டாக் ஆட்டத்தை நோக்கியே இருக்கும். அந்த வழியில் நான் ஆடினால் உறுதியாக சதம் அல்லது இரட்டை சதம் வந்தே தீரும். இது எனக்கு முக்கியமானது. இதைத்தவிர சாதனை படைக்க வேண்டும் என்ற சிந்தனை கிடையாது. சூழ்நிலையை புரிந்து நான் எனது பேட்டிங் பாணியை அப்படியே தொடர விரும்புகிறேன். அது அணிக்கு சிறந்ததாக இருக்கும்’’ என்றார்.