அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமாக ஆடுகளத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டதா?

இந்திய அவுஸ்திரேலிய அணிகளிற்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இடம்பெற்றுவரும் பேர்த் ஆடுகளத்தை அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமான விதத்தில் தயாரிக்குமாறு அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கேட்டுக்கொண்டதாக வெளியான தகவல்களால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்களிற்கு மிகவும் சாதகமான ஆடுகளத்தை தயாரிக்குமாறு என்னை கேட்டுக்கொண்டுள்ளனர் என ஆடுகள தயாரிப்பாளர் பிரெட் சிப்தோர்ப் தெரிவித்துள்ளார்.

பந்து உயர எழும்பி பார்ப்பதை பார்ப்பதற்கு அவர்கள் விரும்பினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இது எனக்கு முன்கூட்டியே கிறிஸ்மஸ் பரிசு கிடைத்துள்ளதை போன்றுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் எதிரணி துடுபப்பாட்ட வீரர்களின் கண்களில் அச்சத்தை பார்ப்பதும் பந்து பறப்பதை பார்ப்பதும் சிறந்த விடயங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இந்த தகவலை நிராகரித்துள்ளது.

 

அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமான விதத்தில் ஆடுகளத்தை தயாரிக்குமாறு கோரவில்லை என அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.