பொட்டு அம்மான் உயிருடன் இல்லையாம்!- மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன

விடுதலைப்புலிகளின் புலனாய்வுத் துறையின் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என்று மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை பொட்டம்மான் உயிருடன் உள்ளார் என்றும் அவர் தற்போது நோர்வே நாட்டில் இருப்பதாகவும்   விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதுகுறித்து மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கூறிய தகவல் இதோ;

இந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையின் இறுதிப் போர் இறுதிக்கட்டத்திற்கு வந்தது. இதன்போது புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

இறுதிக்கட்டப் போரில் நந்திக்கடல் பகுதியில் ஏராளமான சடலங்கள் புதைந்து கிடந்தன.

இவற்றில் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பலரின் சடலங்களும் உள்ளதாக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

இறுதிக்கட்டப் போரில் பல உடல் நீருக்குள்ளும், சேற்றுக்குள்ளும் புதைந்து கிடந்தன. அவ்வாறானதொரு சூழ்நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உயிரற்ற உடலும் மீட்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

இறுதிக் கட்ட நந்திக்கடல் போரில் எந்தவொரு தலைவரும் தப்பிக்க வாய்ப்பில்லை.

அவ்வாறு இருக்க கருணா அரசியல் பிரவேசத்துக்கு வந்ததன் பின் போலியான பிரச்சாரங்களை செய்து வருகின்றார். இது அவரது அரசியல் நோக்கத்தினை மையப்படுத்தியதாகவே உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பொட்டு அம்மான் உயிருடன் இருப்பாராயின் எட்டு வருடங்கள் தலைமறைவாகி இருக்க வேண்டிய தேவை கிடையாது.

அரசியல் நோக்கங்களுக்காகவும் நாட்டில் அநாவசியமாக குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கிலேயும் இவ்வாறான பேச்சுக்களை கருணா கூறி வருகின்றார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உயிரற்ற உடலை கைப்பற்றியதும் எனது படையணியே என்றும் தெரிவித்துள்ளார்.

ஆகவே புலிகளின் புலனாய்வுத் துறையின் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கின்றார் என்ற கருத்து முற்றிலும் பொய்யாகும் என மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.