சிறிலங்கா சபாநாயகரின் உருவ பொம்மைக்கு தீ மூட்டி ஆர்ப்பாட்டம்!

நாடாளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வழியுறுத்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பத்து இலட்சம் கையொப்பங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் வலப்பனை தேர்தல் பிரதேசமான நுவரெலியா, இராகலை நகரில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவின் உருவ பொம்மைக்கும் தீ மூட்டப்பட்டது.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்காவின் தலைமையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் இராகலை நகர பௌத்த ஆலயத்துக்கு அருகில் ஒன்று கூடிய கட்சி ஆதரவாளர்கள் பேரணியாக சென்று இராகலை மேல் நகரதொகுதி சந்தியில் ஒன்று கூடினர்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் சரியான தீர்வை பெற்றுக்கொள்ள உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து பாராளுமன்ற தேர்தலை நடத்தும்படி வழியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக பதாதைகளையும் ஏந்தி வந்தனர்.

இதனையடுத்து கூட்ட மேடை அமைக்கப்பட்ட இடத்திற்கு வருகைதந்தவர்கள் அங்கு அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்காவின் உரையை தொடர்ந்து தேர்தலை வழியுறுத்திய மனுவில்  கையொப்பமிடும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது பேரணியில் ஏந்தி வந்த பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவின் உருவ பொம்மைக்கு தீ மூட்டி தாக்குதலும் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.