மேரி கொல்வின் இலங்கையில் எப்படி தனது ஒரு கண்ணை இழந்தார்?

அமெரிக்க பெண் பத்திரிகையாளர் மேரிகொல்வின் இலங்கையில் இராணுவத்தினரால் சுடப்பட்டு உயிருக்கு போராடிய அந்த தருணங்களை அவரது சிநேகிதி லின்ட்சே ஹில்சம் பேட்டியொன்றில் விபரித்துள்ளார்.

2012 இல் சிரியாவில் கொல்லப்பட்ட மேரி கொல்வின் குறித்து நூலொன்றை எழுதியுள்ள லின்ட்சே ஹில்சம் 2001 இல் மேரி கொல்வின் இலங்கையில் சந்தித்த அனுபவங்கள் குறித்து சர்வதேச ஊடகமொன்றிற்கு பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்

அதன் தமிழ் மொழிபெயர்ப்பு

கேள்வி- இலங்கை தொடர்பான அந்த கதை குறித்து அறிய விரும்புகின்றேன்- அவரின் கண்ணில் பாதிப்பு ஏற்படுவதற்கு காரணமான காயம் எவ்வாறு ஏற்பட்டது?

பதில்- 2001 இல் அவர் தமிழ் புலிகளின் பகுதிக்கு செல்வதற்கு தீர்மானித்தார்.சுமார் ஆறு வருடங்களிற்கு மேல் அந்த பகுதிக்கு எந்த பத்திரிகையாளரும் செல்லவில்லை.அது கிட்டத்தட்ட மறக்கப்பட்ட மோதலாக மாறியிருந்தது.

லண்டனிலிருந்து பெற்ற தொடர்புகள் மூலம் அவர் அப்பகுதிக்கு செல்வதற்கான அனுமதியை பெற்றார் அவர் அங்கு சென்றார் முன்னரங்கினை கடந்து சென்றார்.

எனினும் அவரால் முழுமையான விடயங்களை பெறமுடியவில்லை , விடுதலைப்புலிகள் மேரி கொல்வின் தங்கள் முக்கிய தலைவரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாக தெரிவித்திருந்தனர் ஆனால் அவர்களால் அது முடியவில்லை.

ஆனால் அங்கிருந்து வெளியேறும்போது அவர் நான் என்னால் முடிந்ததை செய்துவிட்டேன் என்ற மனத்திருப்தியுடன் வந்தார்.

நான் அவரின் நாட்குறிப்பை வாசித்திருக்கின்றேன், அவை மிகச்சிறந்தவையாக காணப்பட்டன,  அவர் விடுதலைப்புலிகளின் பகுதியில் உள்ள பகுதிகள் எவ்வளவு அழகாக காணப்பட்டன என  தனது நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார், வனங்கள் குறித்தும் வண்ணாத்திப்பூச்சிகள் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் முன்னரங்கை கடப்பதற்கான வாய்ப்பிருந்தது எனினும் திடீர் என அவர்கள் தாக்கப்பட்டனர்.

தாக்குதலிற்கு உள்ளானதும் அவர் நிலத்தில் விழுகின்றார், அவருடன் கூடயிருந்தவர்கள் அனைவரும் காணாமல்போய்விட்டனர்.

அதன் பின்னர் தன்னை காப்பாற்றிக்கொள்ள ஏதாவது செய்யவேண்டும் என்பதை அவர் உணர்ந்தார்  அவர் எழுந்து நின்று நான் அமெரிக்;க பத்திரிகையாளர்  சத்தமிட்டார்,, அவர்கள் மீண்டும் அவரை சுட்டனர்.

அவர் கண்ணிலும் உடலின் ஏனைய பகுதிகளிலும் கடும் வலியை உணர்ந்தார்,ஆர்பிஜியொன்று அவரை தாக்கியிருந்தது.

அவர் அதிலிருந்து  உயிர்தப்பினார் ஆனால் அந்த பயங்கர சம்பவத்தின் நினைவுகள் பல வருடங்களாக அவரை விட்டு அகலாதவையாக காணப்பட்டன.

கேள்வி- அவரது உடலில் பல  குண்டுசிதறல்கள் காணப்பட்டன என்பது உண்மையா?

பதில் -ஆம். இலங்கை இராணுவத்தினர் முதலில் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டனர், பின்னர் அவரைகாப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போது அமெரிக்க தூதரகத்தின் ஊடக அதிகாரியை படையினர் தொடர்புகொண்டனர்,அவ்வேளை அவரால் மேரிகொல்வின் வலியால் கதறுவதை கேட்க முடிந்தது.

அவர் தன்னை தாக்கியவர்களை ஏசிக்கொண்டிருந்தார்,அவரால் அவ்வாறு பேச முடியுமென்றால் அவர் உயிர் தப்புவார் என ஊடக அதிகாரி நினைத்தார்.

 

கேள்வி- அந்த சம்பவம் இடம்பெற்றவேளை அரசாங்கம் அவர் பயங்கரவாதி என குற்றம்சாட்டியது என்பதை பத்திரிகைகளில் வாசித்திருக்கின்றேன், அவர்கள் அவ்வேளை மேரிகொல்வினிற்கு உதவுவார்கள் என்பது நிச்சயமற்றதாக காணப்பட்டதா?

பதில்- தனது விடயத்தில் அமெரிக்க தூதரகம் தலையிட்டதை சுட்டிக்காட்டி நான் அமெரிக்க பிரஜையாகயிருப்பது குறித்து சந்தோசமடைந்த ஒரே சந்தர்ப்பம் அது என மேரிகொல்வின் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.

நீங்கள் மேரிகொல்வினை பயங்கரவாதியென குற்றம்சாட்டலாம்,நீங்கள் விசாரணைக்கு உட்படுத்தலாம், அமெரிக்காவின் துணிச்சலான உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட பெண் பத்திரிகையாளர் தனது கதையை விசாரணையின் போது சொல்லக்கூடும் என  அமெரிக்க தூதரக அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்திற்கு தெரிவித்திருந்தனர்.