ஈ.பி.டி.பி தவிர்ந்த அனைத்து கட்சிகளுக்கும் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு!

ஈ.பி.டி.பி தவிர்ந்த அனைத்து கட்சிகளுக்கும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன் பொதுச்சின்னத்தில், தமிழ் மக்கள் கூட்டணி தேர்தலை சந்திக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

யாழ். பலாலியிலுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வின்போது, பேரவையின் இணைத்தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் மீண்டும் குரோதங்களையும் விரோதங்களையும் வளர்த்துக்கொண்டு முரண்பாடுகள் ஏற்பட இடமளிக்காமல் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை அடிப்படையில் தேர்தல் அரசியலை எதிர்நோக்குவதற்கு முன்வருமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்டு புதிய கூட்டணியின் வெற்றியை நம்பி கைகோர்க்குமாறும் அவர் கூறியுள்ளார்.

புதிய சின்னத்தில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை தமிழ் மக்கள் பேரவையின் பிரமுகர்கள் மேற்கொள்வார்கள் என நம்பிக்கை வௌியிட்டார்.

அத்துடன் தண்ணீர் கலந்த மிளகாய்த்தூளை யார் மீதும் தௌிக்காமல் முடிவுகளை மனமுவந்து ஏற்றுக்கொள்ளத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.