பாகிஸ்தான் நமக்காக செய்தது என்ன?

சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் போன்றவர்களுக்கு அடைக்கலம் அளித்ததை தவிர அமெரிக்காவுக்காக பாகிஸ்தான் செய்தது என்ன? என அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துவந்த நிதியுதவியை நிறுத்துமாறு உத்தரவிட்டது தொடர்பாக டிரம்ப்பிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த டிரம்ப், ‘சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் போன்றவர்களுக்கு அடைக்கலம் அளித்ததை தவிர அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஒரு மண்ணும் செய்யவில்லை’ என ஆவேசமாக கூறினார்.

பாகிஸ்தானில் நிம்மதியாக, அழகாக வாழ்வதைப்போல் நல்ல விஷயம் ஏதுமிருக்குமா? என்று தெரியவில்லை. ஆனால், அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தின் அருகே (ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த அபோட்டாபாத் பகுதி) பாதுகாப்பாக வாழ்வது அதைவிட நல்ல விஷயம். அவர் அங்கேதான் வாழ்ந்து வருகிறார் என்பது பாகிஸ்தானில் உள்ள அனைவருக்குமே தெரிந்திருந்தது.
ஆனால், இது தெரியாமல் நாம் ஆண்டுதோறும் பாகிஸ்தானுக்கு 130 கோடி டாலர்களை கொடுத்து வந்தோம். அவர்கள் நமக்காக ஒன்றுமே செய்ததில்லை என்பதால்தான், இனி இந்த நிதியை வழங்க கூடாது என நான் உத்தரவிட்டேன் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.