ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’!

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘காற்றின் மொழி’. விதார்த், லட்சுமி மஞ்சு, இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். வருகிற வெள்ளிக்கிழமை (நவம்பர் 16) இந்தப் படம் வெளியாக  இருக்கிறது.

‘காற்றின் மொழி’ படத்தை முதல்நாளே பார்க்க இருக்கின்றனர் நெய்வேலியில் உள்ள நேஷனல் கல்லூரியைச் சேர்ந்த பி.எட். மாணவிகள் 160 பேர். இதற்கான ஏற்பாட்டைக் கல்லூரி நிர்வாகமே செய்திருக்கிறது.

இதுகுறித்து கல்லூரி டிரஸ்ட் உறுப்பினர்களும் சகோதரிகளுமான  வைரம் மற்றும் விஜயலட்சுமி கூறியதாவது… “நடிகை ஜோதிகா பெண்களுக்கு ஊக்கமும் தன்னம்பிக்கையும் அளிக்கும் வகையில் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போதுள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில், யார் எதைப் பார்க்க வேண்டும் என்று தணிக்கை செய்ய முடியவில்லை.

நல்ல விஷயங்களைவிட, கெட்ட விஷயங்கள் வேகமாகப் பரவிவிடுகின்றன. இந்தச் சூழலில் ஜோதிகா போன்ற நல்லெண்ணம் கொண்டவர்கள் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகள்தான் எங்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையாக உள்ளது. ‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’ போன்ற படங்களில், பெண்கள் வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், எப்படி வாழவேண்டும் என்பதை பொழுதுபோக்கோடு கூறப்பட்டிருந்தது.

‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தை, கடந்த வருடம் நாங்கள் உட்பட எங்களது கல்லூரியிலுள்ள அனைத்து  மாணவிகளும் கண்டுகளித்தோம். அவர்கள் படம் பார்த்துவிட்டு, ‘மகளிர் மட்டும்’ படத்தில் ஜோதிகா புல்லட்  ஓட்டி வந்ததுபோல், கல்லூரியில் நாங்கள் புல்லட் மற்றும் கன்றுக்குட்டி ஒன்றை ஏற்பாடு செய்து வைத்ததில் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம் . ‘மகளிர் மட்டும்’ எங்கள் மாணவிகளுக்குப் புத்துணர்ச்சி தந்தது.

 

அதேபோல், ‘காற்றின் மொழி’யும் இருக்கும் என்று நம்புகிறோம். காரணம், இயக்குநர் ராதாமோகனின் ‘மொழி’ எங்களுக்குப் பிடித்த படம். எல்லோரும் ரசிக்கும் ஆபாசமில்லாத படம். அதேபோல் ‘காற்றின் மொழி’யும் இருக்கும் என்று நம்புகிறோம். இங்கே நாவல் படித்து கருத்தைத் தெரிந்துகொள்ள யாருக்கும் நேரமில்லை. ஆனால், சினிமாவைப் பெரிதும் திரையரங்கில் சென்று கண்டிராத எமது மாணவிகளுக்கு, ‘காற்றின் மொழி’ அனைத்தையும் கண்டிப்பாகத் தரும் என்று நம்புகிறோம்.

மேலும் , சினிமாவில் எப்போதும், எந்த நேரத்திலும் நல்ல விஷயங்களை மட்டும் கையிலெடுக்கும் ஜோதிகாவைப் பாராட்டியே தீரவேண்டும். அதற்கு உறுதுணையாக இருக்கும் கணவர் சூர்யாவையும் பாராட்டுகிறோம்.” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.