நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள்!- விசாரணைக்கு 3 நீதிபதிகள்!

சிறிலங்கா  ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 10 மனுக்களை விசாரணை செய்வதற்கு பிரதம நீதியரசர் உட்பட மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டடுள்ளனர்.

அதன்படி பிரதம நீதியரசர் நளின் பெரேரா, உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன, மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருந்தார்.

இந்நிலையிலேயே ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்படமையானது ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடு எனவும், அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடு எனவும் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மனுக்கள் உட்பட மொத்தம் 10 மனுக்கள் உயர் நீதிமன்றில் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகளைத் தவிர சட்டத்தரணிகள், சமூக ஆர்வலர்களும் என பாராளுமன்ற கலைப்புக்கு எதிரான மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

இதேவேளை, உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை இன்றே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ள நிலையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச ஊடகங்களின் பிரசன்னமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.