நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகரிடம் வேண்டுகோள்!

அரசியலமைப்பிற்கு முரணான, சர்வாதிகார ஆட்சியை எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நாடாளுமன்றத்திலேயே தீர்வு உள்ளதாகவும், அதனால் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் நல்லாட்சி அரசாங்கத்தில் மனித உரிமைகளை பாதுகாக்கப்பட்டு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதுடன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 19 ஆவது சீர்திருதத்தின் அடிப்படையில் நாட்டில் நிறைவேற்று அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஒருவரை தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பு சீர்திருத்தின் 42(4) சரத்தின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறக்கூடிய அமைச்சர் ஒருவரையே நியமிக்கப்பட வேண்டும். இருப்பினும் மஹிந்த ராஜபக்ஷவின் நியமனம் அரசியலமைபிற்கு முரணானதாகும்.

இன்று ஜனாதிபதி, சிறு பிள்ளைகளால் கூட நம்ப முடியாத கருத்துக்களை வெளியிடுகின்றார். வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளை காணக்கூடியதாக இருக்கவில்லை.

அத்துடன் அரச ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் மூலம், ஊடக சுதந்திரத்தை கண்டுகொள்ள முடியுமாக இருக்கின்றது.

ஆகவே குறுகிய அரசியல் வாதங்களில் இருந்து விலகி இலங்கையின் எதிர்காலத்திற்காக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்புவிடுத்துள்ளார்

அலரிமாளிகையில் இன்று  சற்றுமுன்னர் இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.