ஏ.ஆர்.முருகதாஸுக்கு வரலட்சுமி சரத்குமார் ஆதரவு!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஆதரவாக வரலட்சுமி சரத்குமார் ட்வீட் செய்துள்ளார்.

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் ‘சர்கார்’. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகி பாபு, பழ.கருப்பையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 6-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. உலகம் முழுவதும் 1200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ‘சர்கார்’ வெளியாகிறது.

இந்நிலையில், ‘சர்கார்’ படத்தின் கதை, தன்னுடைய ‘செங்கோல்’ கதையில் இருந்து திருடப்பட்டது என்று உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார். எழுத்தாளர் சங்கத் தலைவரான இயக்குநர் கே.பாக்யராஜ், ‘செங்கோல்’ கதையில் இருந்து 95% திருடி ‘சர்கார்’ படம் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் தீர்ப்பு, நாளை (அக்டோபர் 30) வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஆதரவாக வரலட்சுமி சரத்குமார் ட்வீட் செய்துள்ளார்.

“என் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பக்கம் நான் நிற்கிறேன். உண்மை தான் ஜெயிக்கும். உண்மை எப்போதுமே வெற்றிபெறும். காலம் பதில் சொல்லும்” என அந்த ட்வீட்டில் கூறப்பட்டுள்ளது.

என்னுடைய ‘தாகபூமி’ குறும்படத்தின் கதையைத் திருடித்தான் ‘கத்தி’ படத்தை எடுத்தார் ஏ.ஆர்.முருகதாஸ் என அன்பு ராஜசேகர் என்பவர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது ஏற்கெனவே வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.