றோ, சிறிசேன, சம்பந்தன்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளுக்கான அமைப்பு (Research and Analysis Wing – RAW) கொலை செய்வதற்கு சதிசெய்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இந்தத் தகவல் இலங்கையின் அரசியலில் மட்டுமல்ல இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உலகின் முக்கிய ஊடகங்கள் அனைத்தும் இந்த செய்தியை முக்கித்துவப்படுத்தி பிரசுரித்திருக்கின்றன.

கடந்த செய்வாக்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இந்தத் தகவலை முதல் முதலாக கொழும்பிலிருந்து வெளிவரும் எக்கநொமிநெக்ஸ்ட் (economynext.com) இணையத்தளமே வெளிப்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து வெளிவரும் இந்து பத்திரிகையிலும் மேற்படி செய்தி வெளியாகியிருந்தது. இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியதைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆலோசகர் சிரால்லக்திலக அதனை மறுத்திருப்பதுடன், ஜனாதிபதி றோவின் பெயரை குறிப்பிடவில்லை. அவர் பொதுவாக நாடுகளின் இரகசிய அமைப்புக்கள் (secret services) தலைவர்களை கொலைசெய்வதற்கு முயற்சிப்பதுண்டு. இது அமெரிக்காவிலும் கூட நடப்பதுண்டு என்று மட்டுமே குறிப்பிட்டார் என்று தெரிவித்திருக்கும் சிரால்லக்திலகவே இப்படியும் கூறுகின்றார். அதாவது, இதனை இந்திய பிரதமர் அறிந்திருக்காமல் இருக்கக் கூடும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டதாக லக்திலக கூறியிருக்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால றோவை மனதில் எண்ணவில்லையாயின் பின்னர் எதற்காக இந்திய பிரமதர் இதனை அறிந்திருக்காமல் இருக்கக் கூடுமென்று கூற வேண்டும்? இந்தியாவில் றோவையும் மிஞ்சிய பிறிதொரு உளவு அமைப்பொன்று இருக்கின்றதா? சிரால்லக்திலகவின் தடுமாற்றத்திலிருந்து ஒரு விடயம் தெளிவாகிறது, அதாவது, மைத்திரிபால சிக்கலான ஒரு விடயமொன்றை கூறிவிட்டார், ஆனால் நிலைமை சிக்கலாகிவிட்டது என்பதை உணர்ந்ததும் தற்போது அவ்வாறு கூறவில்லை என்று சாதிக்க முற்படுகின்றனர்.

சிறிலங்காவின் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க புதுடில்லிக்கு செல்லவிருந்த நிலையிலேயே மைத்திரிபால இவ்வாறானதொரு குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். மைத்திரிபாலவின் குற்றச்சாட்டு இந்திய – சிறிலங்கா உறவில் விரிசலை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. இதற்கிடையில் அமைச்சரவை கூட்டத்தில் இந்தியாவின் திட்டங்கள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் போது கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பில் மைத்திரிபால எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறார். இந்த விடயங்கள் தொடர்பில் அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொண்டு புதுடில்லி செல்லும் நோக்கிலேயே ரணில் காய்களை நகர்த்தியிருக்கின்றார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்தியாவினால் முன்மொழியப்பட்ட திட்டங்கள் தொடர்ந்தும் இழுபறி நிலையில் இருந்துவருகின்ற நிலையிலேயே தற்போது கூட்டரசாங்கத்திற்குள் இந்தியா தொடர்பில் ரணிலுக்கும் மைத்திரிபாலவுக்கும் இடையில் முரண்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன. ஆனாலும் இது தொடர்பில் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மோடிக்கு விளக்கமளித்துள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து நிலைமைகள் சுமுகநிலைக்கு திரும்பியுள்ளதாகவும் சில செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இதிலுள்ள சுவார்ஸ்சயமான பக்கம் தொடர்பிலேயே இந்த பத்தி கவனம் செலுத்துகின்றது. 2015 ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது உடனடியாகவே மகிந்த ராஜபக்ச இந்திய உளவுத்துறையான றோவின் மீது குற்றம் சாட்டியிருந்தார். றோவே தனது தோல்விக்காக திரைமறைவில் பணியாற்றியதாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இதற்கும் ஒரு தொடர்புமில்லை. அவர் இதனை அறிந்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று வருடங்கள் முடிவடையவுள்ள நிலையில் எவரை றோ ஆட்சிக்கு கொண்டுவந்ததாகச் சொல்லப்பட்டதோ, தற்போது அவரே தன்னை றோ கொலை செய்வதற்கு சதி செய்வதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றார். அவரும் மகிந்தவைப் போலவே இதனை இந்திய பிரதமர் அறியாமல் இருந்திருக்கக் கூடுமென்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, கோத்தபாய ராஜபக்ச போன்றவர்களை கொல்லுவதற்கான சதி முயற்சியொன்று இடம்பெற்றுவருவதாக அண்மையில் சில செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த விசாரணகைளின் போது கேரளாவைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகிருந்தன. பின்னர் அவர் மனநோயால் பாதிக்கபட்ட ஒருவர் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன. இவ்வாறான செய்திகளின் பின்னணியில்தான் தன்னை றோ கொலை செய்ய சதிசெய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கிறார். சிங்கள தேசியவாத உணர்வை பற்ற வைப்பதில் இவ்வாறான பரபரப்புக்கள் உண்மையிலேயே செல்வாக்குச் செலுத்தக் கூடியவைதான்.

இவ்வாறு றோவின் மீதான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது இலங்கை அரசியலுக்கு புதிதல்ல. அது மிகவும் பழைய கதைகளில் ஒன்று. சிங்கள அரசியல் சூழல், தமிழ் அரசியல் சூழல் ஆகிய இரண்டிலுமே றோ (RAW) என்னும் மூன்றெழுத்து மீதான கவர்ச்சி இப்போதும் முன்னரைப் போன்று பிரகாசமாகவே இருக்கிறது. ஆனால் தமிழ்ச் சூழலில் முன்வைக்கப்படும் அரைவேக்காட்டுத்தனமான வாதம் போன்ற ஒன்றல்ல இது. ஒரு நாட்டின் ஜனாதிபதி பிராந்திய சக்தியான இந்தியாவின் உளவுத்துறையின் மீது ஒரு சதிக் குற்றசாட்டை சுமத்துவதானது, அரசியல் ரீதியில் பாரதூரமானது. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் பனிப்போர் காலத்துக்குரியவை. அப்போது தங்களுடன் முரண்பாடு கொண்டிருந்த நாடுகளின் தலைவர்களை அமெரிக்க உளவுத்துறை (சி.ஜ.ஏ) இலக்கு வைத்தமை அனைவரும் அறிந்த சங்கதியே. சிலர் அவ்வாறு கொல்லப்பட்டுமிருக்கின்றனர். உதாணரமாக சிலியின் தலைவர் அலண்டே. இவ்வாறான சில கொலைகளை பிற்காலத்தில் சி.ஜ.ஏ ஏற்றுக்கொண்டுமிருக்கிறது. ஆனால் பனிப் போர் காலத்துக்கு பின்னர் அரசுகளின் உளவுத்துறைகள் ஜனநாயக நாடுகளின் தலைவர்களை இலக்குவைத்தமை தொடர்பில் இதுவரை எங்கும் பதிவாகவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில் நோக்கினால் மைத்திரிபால சிறிசேனதான் நீண்டகாலத்திற்கு பின்னர் இவ்வாறானதொரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். ஆதாரமற்ற இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இரு நாட்டு உறவுகளில் பாரிய விரிசல்களாகவும் மாறலாம்.

RAWMITHRI_Lankanewsweb

நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்த நிலையில் இனியும் இந்த நாட்டில் ஒரு புதி அரசியல் யாப்பு வரும் என்று சம்பந்தன் கதை சொல்லிக் கொண்டிருக்கப் போகின்றாரா? ஆகக் குறைந்தது தனது சொந்த மக்களுக்கு உண்மை சொல்லக் கூடிய ஒரு நபராகவாவது சம்பந்தன் இருக்க வேண்டும். சம்பந்தன் கடந்த மூன்று வருடங்களாக மைத்திரிபால சிறிசேனவை எந்தளவிற்கெல்லாம் புகழ்ந்து பேசலாமோ, அந்தளவிற்கு புகழ்ந்து பேசியிருக்கிறார். 2015 பொதுத் தேர்தல் பிரச்சாரங்களின் போது திருகோணமலையில் வைத்து, மைத்திரிபால சிறிசேன ஒரு நெல்சன் மண்டேலா போன்றவர் மார்ட்டின் லூதர் கிங் போன்றவர் என்றெல்லாம் புகழ்ந்து பேசியிருந்தார். சம்பந்தனின் இந்த நகைப்புக்கிடமான பேச்சை, ஒரு வேளை, ஜனாதிபதி மைத்திரிபாலவின் பிள்ளைகள் கேட்க நேர்ந்திருந்தால் கூட சங்கடப்பட்டிருப்பார்கள். இப்போது அந்த நெல்சன் மண்டேலா மார்ட்டின் லூதர் கிங் மைத்திரிபால சிறிசேனவோ, தன்னை கொலைசெய்ய றோ சதி செய்வதாக கூறுகின்றார். இதுவரை தன்னை ஒரு சாதுவாக காண்பித்துவந்த ஜனாதிபதி மைத்திரிபாலவோ திடிரென்று சிங்கமாக காட்சியளிக்கின்றார். பிராந்திய சக்தியான இந்தியாவை வெளிப்படையாகவே பகைக்கும் நிலைக்கு சென்றிருக்கிறார். இப்போது சம்பந்தனின் நிலைப்பாடு என்ன?

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அதாவது, இலங்கை அரசியல் அரங்கு பலம்வாய்ந்த உளவுத்துறைகளின் உதைபந்தாட்ட திடலாக மாறிக் கொண்டிருக்கிறது. இதற்குள் தமிழர்களின் அரசியல் எப்படி சீவிக்கப் போகிறது? இதனை கையாளும் ஆற்றல் தமிழ் தரப்பினரிடம் உண்டா? ஆனால் நிச்சயமாக, இந்தச் சூழலை கையாளும் ஆற்றல் சம்பந்தனிடம் இல்லை என்பது மட்டும் உண்மை. அது சம்பந்தனுக்கும் தெரியாதல்ல.

யதீந்திரா