மக்களின் எதிர்ப்பையடுத்து மூடிய வீதிகளை திறந்தனர் கடற்படையினர்!

முள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்லும் பிரதான வீதிகளை மூடிய கடற்படையினர், மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து மூடிய வீதிகளை மக்களின் பாவனைக்கு திறந்து விட்டுள்ள்ளனர்.

 

முள்ளிக்குளம் கிராமத்திற்கு கடற்படை முகாமினூடாக செல்லும் பிரதான வீதியை திடீரென கடற்படையினர் முட்கம்பிகள் கொண்ட  வேலியினால் வீதியை இடை மறித்து அடைத்தமையினால்  நேற்று (21-10-2018) ஞாயிற்றுக்கிழமை (21) காலை முதல் முள்ளிக்குளத்தில் நிலைகொண்டுள்ள கடற்படையினருக்கும், முள்ளிக்குளம் கிராம மக்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினை சுமூக நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லோரான்ஸ் லியோ தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லோரான்ஸ் லியோ மேலும் தெரிவிக்கையில்,

ஞாயிற்றுக்கிழமை(21) காலை முள்ளிக்குளம் கிராம மக்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டுள்ளது.

முள்ளிக்குளம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் விடுவிக்கப்பட்ட சுமார்  77 ஏக்கர் காணியில் மக்கள் நடமாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த காணி பகுதிக்குச் செல்லும் பிரதான வீதிகளை சனிக்கிழமை(20) தொடக்கம் கடற்படையினர் இடை மறித்து முட்கம்பிகளினால் வேலிகள் அடைத்து மக்களை உள்ளே செல்ல அனுமதி மறுத்து வந்துள்ளனர்.

சனிக்கிழமை(20) முதல் மக்கள் குறித்த வீதிகளினாடாக பயணம் செய்ய முடியாத நிலையை கடற்படையினர் ஏற்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் முள்ளிக்குளம் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) காலை திருப்பலி நிறைவடைந்த நிலையில் மக்கள் மீண்டும் திரும்பிச் செல்லுகின்ற போது கடற்படை முகாமில் இருந்த கடற்படையினர் குறித்த வீதிகளினாடாக சென்ற மக்களை இடைமறித்து விட்டார்கள்.

இதனால் கடற்படையினருக்கும், முள்ளிக்குளம் மக்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் சம்பவம் இடம் பெற்றுக் கொண்டிருந்த போது எதேர்ச்சையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் தலைவர், உறுப்பினர்கள் முள்ளிக்குளம் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

இதனால் சிறிது நேரம் மக்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது. சிறிது காலமாக முள்ளிக்குளம் மக்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டு வருகின்றது.

தொடர்ச்சியாக கடற்படையினர் பாதைகளை இடை மறித்து மக்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முள்ளிக்குளம் மக்களின் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு அசௌகரியங்களுக்கு தொடர்ந்தும் முகம் கொடுத்து வருகின்றனர்.

உயர் அதிகாரியிடம் இருந்து வந்த உத்தரவிற்கு அமைவாகவே குறித்த பாதைகளை மூடியதாக தெரிவித்த கடற்படையினர் மக்கள் மற்றும் மக்கள் பிரதி நிதிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து மூடி வைத்திருத்த வீதிகளை மீண்டும் மக்களின் பாவனைக்காக கடற்படையினர் திறந்து விட்டுள்ளனர்.

எனவே மக்கள் பிரதி நிதிகள் உடனடியாக குறித்த விடயத்தில் தலையிட்டு முள்ளிக்குளம் மக்களின் சுதந்திர வாழ்வுக்கு வழியமைத்துக் கொடுக்க வேண்டும் என முள்ளிக்குளம் பங்குத் தந்தை அருட்தந்தை லோரான்ஸ் லியோ மேலும் தெரிவித்தார்.

 

ஆனால் உயர் அதிகாரியிடம் இருந்து வந்த உத்தரவிற்கு அமைவாகவே குறித்த பாதைகளை மூடியதாக தெரிவித்த கடற்படையினர் மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து மூடி வைத்திருத்த வீதிகளை மீண்டும் மக்களின் பாவனைக்காக கடற்படையினர் திறந்து விட்டுள்ளனர்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.