நியூசிலாந்தின் மீள்குடியேற்ற சலுகையை ஏற்றுக்கொள்ளும் ஆஸ்திரேலியா!

நியூசிலாந்தில் மீள்குடியேற்றம் செய்யப்படும் அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் வர வாழ்நாள் தடை விதிக்கும் சட்டத்தை ஆஸ்திரேலியா நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், நியூசிலாந்தின் மீள்குடியேற்ற சலுகையை ஏற்றுக்கொள்வதாகக் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன்.

நவுரு மற்றும் மனுஸ்தீவுகளில் உள்ள பல்வேறு நாட்டு அகதிகளில் ஆண்டுதோறும் 150 அகதிகளை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக நியூசிலாந்து அரசு ஆஸ்திரேலியாவுக்கு நீண்ட காலமாக தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து வருகின்றது. அதனை பல ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அரசு நிலுவையில் வைத்திருந்த நிலையில், மீண்டும் அது தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன.

கடந்த 5 ஆண்டுகளாக கடுமையான எல்லையோர கொள்கையின் கீழ் படகு வழியாக வரும் அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலிய அரசு நிராகரித்து வருகின்றது. இந்த நிலையில், படகு வழியாக வந்த அகதிகள் இன்றும் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளை மனித உரிமை தரப்பு மட்டுமின்றி, எதிர்கட்சிகளும் தெரிவித்து வருகின்றன.

நியூசிலாந்தில் குடியுரிமைப் பெற்ற மக்கள், பிரத்யேக முறையின் கீழ் ஆஸ்திரேலியாவில் வாழ்நாள் முழுதும் வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயன்று, நவுரு மற்றும் மனுஸ்தீவு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் நியூசிலாந்தில் மீள்குடியேற்றம் செய்யும் பட்சத்தில், அவர்கள் இந்த பிரத்யேக முறையின் கீழ் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையக்கூடும் என தற்போதைய அரசு அஞ்சுகின்றது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா மற்றும் பிசினஸ் விசாவில் வருவதுக்கு கூட அகதிகளுக்கு வாழ்நாள் தடை விதிப்பது தேவையற்றது, ஆஸ்திரேலியா நலன்களுக்கு எதிரானது என கருதுகின்றது எதிர்கட்சியான லேபர் கட்சி.

அதே சமயம், நியூசிலாந்தில் மீள்குடியேற்றம் செய்யப்படும் அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய தடைவிதிக்கும் மசோதாவுக்கு தற்போதைய நிலையில் ஆதரவு இல்லை என்பதையும் பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, 2016ம் ஆண்டு ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின் படி 1,250 அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை தொடர்ச்சியாக காரணம் காட்டி வந்த ஆஸ்திரேலிய அரசு, இந்த ஒப்பந்தம் முடிவுற்ற பின்பே மற்றொரு ஒப்பந்தம் குறித்து சிந்திக்க முடியும் என நியூசிலாந்தின் சலுகையை கிடப்பில் போட்டு வந்தது.

அமெரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான ஒப்பந்ததின் கீழ் ஆஸ்திரேலியா தடுப்பு முகாமிலிருந்து 462 அகதிகள் அமெரிக்கா சென்றுள்ளதாக கூறுகிறார் அகதிகள் நல செயல்பாட்டாளர் ஐன் ரிண்டோல். இன்னொரு புறம், நவுரு மற்றும் மனுஸ்தீவுகளில் உள்ள அகதிகளுக்கு மருத்துவ வசதிகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் ஐ.நா. வரை சென்றுள்ளது. இந்த சூழலுகளுக்கு இடையே ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை நியூசிலாந்தில் குடியேற்றுவது தொடர்பான விவாதம் மீண்டும் மேலெழுந்துள்ளது.