இராணுவம் வசமிருந்த 5 ஏக்கர் காணி விடுவிப்பு!

வடக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களின் சுமார் 87 ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் இராணுவத்தின் வசம் காணப்பட்ட 5 ஏக்கர் காணிகள் மன்னார் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேசச் செயலக காணி அலுவலகர் க.வசந்தன் தெரிவித்துள்ளார்.

1990 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தின் வசம் இருந்த குறித்த 5 ஏக்கர் காணியும் சுமார் 28 வருடங்களின் பின்னர் உரிமையாளர்களிடம் கையளிக்கும் வகையில் மன்னார் பிரதேசச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த 5 ஏக்கர் காணியில் சுமார் 15 குடும்பங்களுக்கான காணிகளும், திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலகர் சபைக்கான காணி, மற்றும் வைத்திய சாலைக்கான காணிகளும் அடங்குவதாக மன்னார் பிரதேசச் செயலக காணி அலுவலகர் க.வசந்தன் தெரிவித்தார்