தமிழ் குடும்பம் ஒன்று அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்படவுள்ளது!

பிரித்தானியாவில்  உள்ள ஈழத் தமிழ் குடும்பம் ஒன்று அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பக்கவாதம் ஏற்படும் அபாயத்தில் உள்ள ஈழத் தமிழர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர். எனினும் அவருக்கு விமானத்தில் ஆபத்து உள்ளதாக கூறி குடும்பத்தினர் 4 வைத்தியர்களை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற சங்கரப்பிள்ளை பாலசந்திரன் கடந்த 6 வருடங்களில் பக்க வாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

60 வயதான குறித்த நபர் கடந்த 2007ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு சென்ற நிலையில் அவரது தொழில் விசா நிறைவடைந்துள்ளது.

இதன் காரணத்தினால் அவர் தனது குடும்பத்தினரான மனைவி, மகன் மற்றும் இரண்டு மகளுடன் அவுஸ்திரேலியாவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார்.

27 மணி நேர விமான பயணத்தில் அவரை கண்கானிக்க 4 வைத்தியர்கள் விமானத்தில் பயணிக்க வேண்டும் என பாலச்சந்திரனின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Heathrow விமான நிலையத்திற்கு அருகில் கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இந்த குடும்பத்தினர் திருப்பி அனுப்புவதற்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் பாலசந்திரன் மற்றும் குடும்பத்தினர் தன்னார்வமாக பிரிட்டனை விட்டு வெளியேறுவதற்காக விமானத்தில் ஏறினர்.

இருந்த போதிலும், பாலசந்திரன் நோய்வாய்ப்பட்டமையினால் விமானத்தில் இருந்து இறங்க நேரிட்டுள்ளது.

பிரித்தானியாவை விட்டு தாம் செல்வதற்கு தயார் என்றும், இருப்பினும் மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படலாம் என்பதனால் தங்களுக்கு 4 மருத்துவர்கள் வேண்டும் என பாலசந்திரனினின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் பிரித்தானிய அதிகாரிகள் என்ன தீர்மானம் எடுப்பார்கள் என தெரியவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.