அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா தனது கடற்படை தளம் இல்லையாம்!

சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா தனது கடற்படை தளத்தை அமைக்கலாம் என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சிறிலங்கா இது குறித்து அமெரிக்காவிற்கு தெளிவுபடுத்தியுள்ளது.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலுவலகம் இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையிலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.

சிறிலங்காவில் சீனாவின் கடற்படை தளம் உருவாகலாம் என சிலர் கற்பனை செய்கின்றனர் என தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம் அம்பாந்தோட்டை துறைமுகம் என்பது சிறிலங்காவின் துறைமுக அதிகார சபைக்கும் சீனா மேர்ச்சன்ட் நிறுவனத்திற்கும் இடையிலான வர்த்தக முயற்சி எனவும் குறிப்பிட்டுள்ளது.

சிறிலங்காவின் சீனாவின் கடற்படை தளங்கள் இல்லை எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா கடற்படையின் தென்பகுதிக்கான தலைமைப்பீடத்தை அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பை கருதி அங்கு மாற்றியுள்ளோம் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த விடயங்கள் குறித்து அமெரிக்காவிற்கு தெளிவுபடுத்தியுள்ளோம், சிறிலங்கா இராணுவத்தினர் துறைமுகத்திற்கு அருகில் நிலை கொண்டுள்ளனர் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மத்தல விமானநிலையத்தின் முகாமைத்துவத்தை இந்தியாவிற்கு வழங்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் சிறிலங்கா பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க துணைஜனாதிபதி மைக் பென்ஸ் இலங்கையில் சீனாவின் கடற்படை தளம் உருவாவதற்கு அம்பாந்தோட்டை துறைமுகம் வழிகோலும் என கடந்தவாரம் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.