பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முதல் முறையாக சீனாவுக்கு அடுத்த மாதம் பயணம் மேற்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் கடந்த ஆகஸ்டு மாதம் பதவியேற்றுக்கொண்டார். பிரதமராக அவர், அடுத்த மாதம் (நவம்பர்) முதல் முறையாக சீனாவுக்கு செல்வதாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா முகமது குரேஷி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சீனா-பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் ஒரு சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தை விரைவில் முடிக்க பாகிஸ்தான் விரும்புகிறது. இதில் எந்தெந்த துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என சீனாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்காக பிரதமர் இம்ரான்கான் முதல் முறையாக சீனாவுக்கு அடுத்த மாதம் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கிறோம்’ என்று கூறினார்.
குரேஷி மேலும் கூறுகையில், ‘எங்களுக்கு உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது. சாலை, ரெயில் இணைப்புகள் உள்ளிட்டவை பற்றாக்குறையாக இருக்கிறது. எனவே சீனா-பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் பல துறைகளில் குறிப்பாக தொழில்துறை வளர்ச்சி, வேளாண் உற்பத்தி மற்றும் நாட்டின் வறுமை ஒழிப்பு போன்றவற்றுக்கு பயன்படும்’ என்றும் தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal