யுத்தத்தில் உயிர்நீத்த தமிழ் மக்களை நினைவுகூருவதில் பிரச்சினை இல்லையென இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளின் மறைவுகளை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி நிகழ்வுகளை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
“வடக்கில் யுத்தம் நிறைவடைந்து மக்கள் சுமூகமாக வாழ ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரவேண்டியது அவசியமான ஒன்றாகும்.
ஆனால் நாட்டில் பெரும் அச்சுறுத்தலாக இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக மாவீரர் தினமோ அல்லது பிறிதொரு தினமோ நடத்தப்படுமானால் அவ்விடயத்தில் அவதானம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.
இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக அஞ்சலி செலுத்தப்படுமானால் நாட்டில் தமிழ், சிங்கள மக்களிடத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் சிக்கலை தோற்றுவிக்கும்” என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal