பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதுஷின் உதவியுடன் தன்னைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது, பல்வேறு நம்பகமான வழிகளினூடாக சரிபார்த்துக் கொண்டதில், இத் தகவல் உண்மையானது என்று தெரிய வந்துள்ளது. அதற்குப் பின்னர், எனக்கு முழுமையான எண்ணிக்கை கொண்ட பாதுகாப்பு அணியை மீளப்பெறுவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பேசினேன்.
எனது பாதுகாப்பு அணி பாதியாகக் குறைக்கப்பட்டு விட்டதாகக் கூறினேன். அதனைப் பார்த்துக் கொள்வதாக இணங்கிய போதிலும் அதற்குப் பின்னர் அவரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. இது நடந்து ஒன்றரை மாதங்களாகி விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலையாகும் போது என் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. பாதாள உலகக் குழுத் தலைவரின் இந்த முயற்சியை அறிந்து கொண்டு நான் மேலதிக முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருந்ததேன்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் என்னையும் கொலை செய்யும் சதித் திட்டம் பற்றிய செய்திகள் வெளியானதும் முன்னாள் மற்றும் பணியில் இருக்கும் இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பலர் தொலைபேசியில் அழைத்து மேலதிக பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்யுமாறும் உள்ளூர் பயணங்களை குறைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டனர் என்று கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். மேலும் தமக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ்மா அதிபருக்கு கோத்தபாய ராஜபக் ஷ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal