கோட்டையைத் தந்தால் மக்களின் காணிகளை கையளிக்க தயார்!- தளபதி தர்சன ஹெட்டியாராச்சி

யாழ்ப்பாண கோட்டையை இராணுவத்தினருக்கு கையளித்தால் யாழில் பல காணிகளை இராணுவம் மீள கையளிக்க தயாராக உள்ளது என யாழ். மாவட்ட இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பலாலி இராணுவ தலைமையகத்தில்   நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அதனை தெரிவித்தார்..

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “யாழில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் பல ஏக்கர் காணிகளை மீள அதன் உரிமையாளர்களிடம் கையளித்து வருகின்றோம். இன்னமும் கையளிக்கவுள்ளோம்.

யாழ் கோட்டை பகுதியை இராணுவத்தினருக்கு கையளித்தால் யாழில் உள்ள இராணுவத்தினர் அங்கு நிலை கொண்டு ஏனைய பகுதிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்க தயாராக உள்ளோம்.

இதற்காக ஜனாதிபதி , பிரதமர், தொல்லியல் திணைக்களம் ஆகியோரிடம் கோரிக்கைகளை விடுத்துள்ளோம். அதற்கு சாதகமான பதில் வரும் என எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்தார்.