அவுஸ்ரேலிய இசைத்திருவிழாவில் இருவர் உயிரிழந்தனர்!

அவுஸ்ரேலிய இசைத்திருவிழாவில் அளவு கடந்து போதை மாத்திரைகளை உட்கொண்டதால் 23 வயதான ஆணும், 21 வயதான பெண்ணும் உயிரிழந்தனர்.

அவுஸ்ரேலியாவில் சிட்னி நகரில் 2009-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் இசைத்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் அந்த இசைத்திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் போதை மாத்திரைகளை உட்கொண்டு உற்சாகத்தில் மிதந்தனர்.

சிலர் அளவு கடந்து போதை மாத்திரைகளை உட்கொண்டதால் சுய நினைவுகளை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்திசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். அங்கு 23 வயதான ஒரு ஆணும், 21 வயதான ஒரு பெண்ணும் பரிதாபமாக பலியாகி உள்ளனர். 10-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிட்னி சர்வதேச ரெகாட்டா மையத்தில் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு இருந்த 10 பேர் மீது காவற்துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்கள் இசைத்திருவிழாவில் 120 போதை மாத்திரைகளை வினியோகித்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் குறித்து நியூசவுத் வேல்ஸ் மாகாண முதல்-அமைச்சர் கிளாடிஸ் கூறும்போது, நடந்து உள்ள சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், இது ஒரு பயங்கரமான சம்பவம் எனவும் தெரிவித்த அவர் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.

இதேபோன்று 2013 மற்றும் 2015-ம் ஆண்டில் இசைத்திருவிழாவின்போது போதை மாத்திரைகள் உட்கொண்டு 2 இளைஞர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.