ஐஎஸ்ஐ தான் உலகின் சிறந்த உளவுத்துறை!-இம்ரான் கான்

ஐஎஸ்ஐ தலைமைச் செயலகத்தை முதன் முதலாகப் பார்வையிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் , ஐஎஸ்ஐ உலகிலேயே சிறந்த உளவு ஸ்தாபனம் என்றும் அதுவே தங்களது முதல்வரிசை பாதுகாப்பும் என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் இண்டெர் சர்வீஸஸ் இண்டெலிஜென்ஸ் என்பதுதான் ஐஎஸ்ஐ அழைக்கப்படுகிறது. இதற்கு இம்ரான் தன் அமைச்சரவை சகாக்களுடன் வருகை தந்தபோது அதிகாரிகள் பிரதமர் இம்ரானிடம் அவர்களது பல்வேறு பாதுகாப்புத் திட்டங்களை விளக்கினர்.

“பாகிஸ்தான் பிரதமர் ஐஎஸ்ஐ தேசப்பாதுகாப்புக்கு ஆற்றும் சேவையைப் பாராட்டியுள்ளார், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்புச் செயல்பாடுகளில் ஐஎஸ்ஐ-யின் பாராட்டுக்குரிய செயல்களை விதந்தோதினார். மேலும் ஐஎஸ்ஐ தான் நம் நாட்டின் முதல்வரிசை பாதுகாப்பும் ஆகும். மேலும் உலகிலேயே தலைசிறந்த உளவுஸ்தாபனமும் இதுவே என்று இம்ரான் பாராட்டினார்” என்று ஐஎஸ்ஐ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இம்ரான் கான் பாகிஸ்தான் ராணுவத்தின் கையாள் என்று பலரும் அவரை விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு முக்கிய காரணமே ஐஎஸ்ஐ தான் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டும் நிலையில் உலகில் தலை சிறந்த உளவு ஸ்தாபனம் என்று இம்ரான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.