தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

வவுனியா பாரதிபுரம் 50 வீட்டுத்திட்டத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் 21 வயதுடைய இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.21 வயதுடைய கௌரி சங்கர் என்ற இளைஞன் நேற்று மாலை அவரது உறவினர் வீட்டிற்கு பின்புறமாக காணப்படும் பாவனையற்ற வளவில் உள்ள மரம் ஒன்றிலே தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

அவ்விடத்தில் ஆடு மேய்க்க சென்ற நபரொருவர் இவ் சடலத்தினை பார்வையிட்டதுடன் உடனடியாக பொதுமக்கள், கிராம சேவையாளர் , காவல் துறைக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் காவல் துறை மற்றும் இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரதீப் மற்றும் வேலன்குளம் கிராம சேவையாளர் சர்வேஸ்வரன் ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சடலத்தினை பார்வையிட்டதுடன் வவுனியா காவல் துறைக்கு தகவல் வழங்கினார்கள்.

வவுனியா பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன் தடயவியல் காவல் துறை மரணம் தொடர்பான பகுப்பாய்வுகளை மேற்கொண்டனர்.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையே தற்கொலைக்கு காரணமென ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக காவல் துறையினர் மேலும் தெரிவித்தனர்.

4.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட இளைஞனின் சடலத்தினை இரவு 10.05 மணியளவிலேயே திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஸோர் பார்வையிட்டதுடன் கயிற்றினை வெட்டி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறுகாவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். இவ் இளைஞனின் மரணம் பாரதிபுரம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.