பேரணியில் முகமூடி அணிந்த குழுக்கள்! – புலனாய்வு தகவல்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இன்று கொழும்பில் முன்னெடுக்க ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிப் பேரணியில் 75000 பேர் வரையில் கலந்துகொள்ளவுள்ளதாகவும், முகமூடி அணிந்த குழுக்களும் பங்கேற்கவுள்ளதாகவும் உளவுத் துறைக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி இல்லம், அலரி மாளிகை உள்ளிட்டவை ஆர்ப்பாட்டக் காரர்களால் சுற்றிவளைக்கப்படவுள்ளதாகவும், ஆர்ப்பாட்டக் காரர்கள் அவற்றை தமது கட்டுப்பாட்டில் எடுக்கவுள்ளதாகவும் முகமூடி அணிந்த குழுக்களும் பங்கேற்கவுள்ளதாகவும் பரிகார பூஜைகளும், தெய்வ பரிகார நடவடிக்கைகளும் அங்கு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் காவல் துறையினர்  சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நாட்டை பிளவுபடுத்துதல், இராணுவத்தினரை வேட்டையாடுதல், மத்தலை விமான நிலையத்தை விற்பனை செய்ய முயற்சி, சிங்கப்பூர் ஒப்பந்தம், வாழ்க்கைச் செலவு உயர்வு, அதிகரித்த வரிச் சுமை, மத்திய வங்கி பிணை முறி மோசடி, மாகாண சபை தேர்தலை திட்டமிட்டு பிற்போடுகின்றமை உள்ளிட்டவற்றுக்கு எதிராகவே ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இன்று(05) கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுக்கவுள்ளது.

இதேவேளை அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிப் பேரணிக்கு எதிராக தடை உத்தரவு கோரி காவல் துறை  நீதிமன்றங்களில் தாக்கல் செய்த மூன்று மனுக்கள் நேற்று நிராகரிக்கப்பட்டன. கோட்டை நீதிவான் நீதிமன்றில் கொள்ளுபிட்டி காவல் துறையினம் , கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் கறுவாத்தோட்டம் காவல் துறையினரும் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் (இலக்கம் 4) வெலிக்கடை காவல் துறையினரும்  முன்வைத்த கோரிக்கைகளே இவ்வாறு நிராகரிக்கப்பட்டன.

எனினும் இன்று இறுதி முயற்சியாக கோட்டை காவல் துறை  ஊடாக தடை உத்தரவு பெறும் முயற்சிகளில் பொலிஸ் திணைக்களம் இறங்கியுள்ளது. அதன்படி இன்று கோட்டை காவல் துறை கோட்டை நீதிவான் நீதிமன்றிடம் தடை உத்தரவொன்றினை கோரவுள்ளதாக காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.