140 கோடி பேரை நோய் தாக்கும் அபாயம்!

உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாததால் சர்வதேச அளவில் 140 கோடி ஆண்களுக்கும், பெண்களுக்கும் கடுமையான நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உடற்பயிற்சி செய்வது உடல் நலனுக்கு சிறந்தது. இதன் மூலம் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் உடற்பயிற்சி செய்வது முக்கியம். அதை செய்யாவிட்டால் இருதய நோய்கள், நீரிழிவு மற்றும் புற்று நோய் பாதிக்கும் அபாயம் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘தி லான்சைட் குளோபல் ஹெல்த்’ என்ற அறிவியல் நாளிதழில் உலக சுகாதார நிறுவனம் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து கட்டுரை வெளியிட்டுள்ளது.

அதில் வாரத்துக்கு குறைந்தது 150 நிமிடங்கள் நடை பயிற்சி, நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற சாதாரண உடற்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில் சுமார் 75 நிமிட நேரம் கடினமான உடற்பயிற்சியான ஓடுதல், குழு விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்தகைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாததால் சர்வதேச அளவில் 140 கோடி ஆண்களும், பெண்களும் கடுமையான நோய் பாதிப்பு ஏற்படும் அபாயத்தில் உள்ளனர் என கூறப்படுகிறது.

அதுகுறித்த ஆய்வு கடந்த 2001-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டது. 168 நாடுகளில் 19 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.