சிட்னியில் பல இலக்குகளை தாக்க திட்டமிட்டிருந்த சிறிலங்கா பிரஜை!

அவுஸ்திரேலியாவில் ஐஎஸ் அமைப்பின் சார்பில் செயற்பட்டதாக குற்றம்சாட்டி சிறிலங்காவை சேர்ந்த முஸ்லீம் நபர் ஒருவரை கைதுசெய்துள்ள நியுசவுத்வேல்ஸின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், கைதுசெய்யப்பட்டுள்ளவர் சிட்னயின் பல முக்கிய கட்டிடங்களை இலக்குவைத்திருந்தார் என தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவிற்கு கல்வி விசாவில் வருகை தந்து நியுசவுத்வேல்ஸ் பல்கலைகழகத்தில் பணியாற்றி வந்த முகமட் கமர் நிஜாம்டீன் என்பவரையே நியுசவுத்வேல்ஸின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

சிட்னியின் தென்கிழக்கில் உள்ள கென்சிங்டனில் உள்ள பல்கலைகழக வளாகத்தில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்காவைச் சேர்ந்த நபர் பல்கலைகழக வளாகத்திலும் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரது வீட்டை சோதனையிட்ட காவல்துறையினர் பல இலத்திரனியல் உபகரணங்களை அவரது வீட்டிலிருந்து மீட்டுள்ளனர்.

சிறிலங்கா பிரஜையிடமிருந்து பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்வதற்கான திட்டங்கள் குறித்த ஆவணங்களையும் இலக்கு வைக்க கூடிய பல இடங்கள் மற்றும் நபர்களின் விபரங்கள் அடங்கிய குறிப்பேட்டையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள நபரிடமிருந்து மீட்கப்பட்ட ஆவணங்கை வைத்துப்பார்க்கும்போது அவருக்கும் ஐஎஸ் அமைப்பிற்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரஜையின் குறிப்பேட்டை வாசித்த பல்கலைகழகத்தின் ஏனைய பணியாளர்கள் காவல்துறையினரை எச்சரிக்கை செய்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவைச் சேர்ந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை பயங்கரமானவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பல கட்டிடங்களும் தனிநபர்களும் இலக்காக தெரிவிக்கப்பட்டுள்ளதை அவர் உறுதிசெய்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு கல்வி விசாவில் சென்ற நிசாம்டீன் நியுசவுத்வேல்ஸ் பல்கலைகழகத்தில் பணியாற்றியதுடன் அவ்வப்போது சிறிலங்கா சென்று வந்தார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இவரை முன்னர் எங்களிற்கு தெரியாது இவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.