வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்ல தடை!

நெடுங்கேணி- ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது என கூறியிருக்கும் தொல்லியல் திணைக்களம், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என நெடுங்கேணி  காவல் துறை  ஊடாக கூறியிருக்கின்றது.

இது குறித்து நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர் துரைராசா தமிழ்செல்வன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், வெடுக்குநாறி மலையையும், அங்குள்ள ஆதி ஐயனார் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள காட்டுப்பகுதியை நெடுங்கேணி பிரதேச மக்கள் மிக நீண்டகாலமாக பாதுகாத்து வந்துள்ளனர். குறிப்பாக 2014 ஆம் ஆண்டு வெடுக்குநாறி மலையை உடைத்து கருங்கல் அகழ்வதற்காக சிலர் முயற்சித்தபோது மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து அதனை தடுத்திருந்தார்கள்.

இந்நிலையில் கடந்த 8 ஆம் திகதி நெடுங்கேணி பிரதேச காவல் துறை  நிலையத்திலிருந்து எமக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் 10 ஆம் திகதி காலை 10 மணிக்கு எம்மை காவல் துறை நிலையத்திற்கு வருமாறும் வெடுக்குநாறி மலை ஆலய நிர்வாகத்தினர் வரவேண்டும் எனவும் கூறப்பட்டது. இதற்கமைய இன்று காலை 10 மணிக்கு நெடுங்கேணி காவல் துறை நிலையத்திற்கு நாங்கள் சென்றிருந்தோம்.

அப்போது தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகள் 4 பேர் அங்கு வந்திருந்தனர். அவர்கள் 4 பேரும் சிங்கள மொழி பேசுபவர்கள். அவர்கள் பேசுவதை காவல் துறை எமக்கு மொழி பெயர்த்து கூறினார்கள்.

இதன்போது வெடுக்குநாறி மலை தமது ஆழுகைக்குள் வந்துள்ளதாகவும், வெடுக்குநாறி மலையில் உள்ள ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள காட்டுப்பகுதிக்குள் செல்ல கூடாதெனவும், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் நாளை ஆடி அமாவாசை பூசைக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டோம். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் காவல் துறை பேசியதன் அடிப்படையில் பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.