வடக்குக்கென ஒரு பாரம்பரியம் இருந்து அதனை போர்ப் பாதிப்பு குழப்பியுள்ளது!

கல்வி கற்பித்தலில், வடக்குக்கென ஒரு பாரம்பரியம் இருந்து வந்தது என்று தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், போர்க்காலமும் போர்ப் பாதிப்பும் அதனைக் குழப்பிவிட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார். ஆனால், வடமாகாணப் பாடசாலைகளில் பணிபுரிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்துகொண்டு செல்ல வேண்டுமென, அவர் கோரிக்கை விடுத்தார்.

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணிபுரிவதற்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் பொதுநூலகக் கேட்போர்கூடத்தில், நேற்று (05) நடைபெற்ற போது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட முதலமைச்சர், “கல்வி தான் எமது ஒரேயொரு திடமான பாதுகாப்பு” என்றும் குறிப்பிட்டார்.

வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையிலும் நேர்முகத் தேர்வுகளிலும் தெரிவுசெய்யப்பட்ட, 194 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள், இதன்போது வழங்கப்பட்டிருந்தன.

பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள அனைவரும், தரம் 1 முதல் பட்டப்படிப்பு வரை, இலவசக் கல்வி முறையின் நன்மைகளைப் பெற்றுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அன்றைய ஆசிரியர்கள், சிறப்பான சேவைகளை ஆற்றியமையைப் போன்று, புதிய ஆசிரியர்களும் அவ்வாறு செயற்பட வேண்டுமெனவும் கோரினார்.