இஸ்ரேல் சிறையிலிருந்து விடுதலையானார் பாலஸ்தீன சிறுமி !

இஸ்ரேல் ராணுவ வீரரை அறைந்ததற்காக சிறைத் தண்டணை விதிக்கப்பட்ட பாலஸ்தீன சிறுமி அஹித் தமீமி விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

சிறையிலிருந்து விடுதலையான அஹிம் தமீமிக்கு பாலஸ்தீனத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நில ஆக்கிரமிப்புகள் மற்றும் பாலஸ்தீன எல்லையில் இஸ்ரேல் வீரர்களின் அட்டூழியங்களை எதிர்த்து பாலஸ்தீன மக்கள் பல ஆண்டுகளாகவே போராடி வருகின்றனர். அம்மக்களின் பல ஆண்டுகால போராட்டம் உலக நாடுகளிடம் பெரிதான தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையில் 17 வயது சிறுமியான அஹித் தமீம் தனது போராட்டத்தின் மூலம் உலக நாடுகனை பாலஸ்தீனம் மீது கூடுதலாக பார்வை விழும்படி செய்தார்.

2012 முதல் 2016 தமிம் இஸ்ரேலை எதிர்த்தும், இஸ்ரேலிய ராணுவத்தினரையும் எதிராகத் தொடர்ந்து தனது குடும்பத்தாருடன் போராடி வருகிறார். அவர் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோக்கள் பல இணையத்தில் பிரபலமாகின.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தமீமின் கிராமமான நபி சாலிபில் இஸ்ரேலிய அரசு தனது குடியேற்றங்களை விரிவுபடுத்துவதை எதிர்த்து போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது தமீம் இஸ்ரேல் வீரரைக் கன்னத்தில் அறைந்து தாக்கிய வீடியோ ஒன்று வெளியானது.

இதன் அடிப்படையில் இஸ்ரேல் ராணுவம் தமீம்மை கைது செய்தது. இது தொடர்பான விசாரணை நடைபெற்ற வந்த நிலையில் தமீமுக்கு 8 மாத சிறை தண்டனை விதித்தது அந்நாட்டு ராணுவ நீதிமன்றம். மேலும் இந்த வழக்கில் தமீம்மின் தயாருக்கும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அஹித் தமீமிமும், அவரது தயாரும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனை பாலஸ்தீனமும் உறுதிப்படுத்தியுள்ளது.

சிறை விடுதலைக்கு பின்னர் தமீம் பாலஸ்தீன மக்களை சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் பேசும்போது, “நான் சிறையிலிருந்தப்போது எனக்கு உதவியாக இருந்த பத்திரிகைகளுக்கும், பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் இப்போது மகிழ்ச்சியில் இருக்கிறேன் இருப்பினும் முழு மகிழ்ச்சி இல்லை. இன்னும் இஸ்ரேல் சிறைகளில் நம் மக்கள் இருக்கிறார்கள்.

எனது சகோதரி இல்லாமல் எனது மகிழ்ச்சி நிறைவடையாது அவள் விரைவில் விடுதலை செய்யப்படுவாள் என்று நம்புகிறேன். மக்களிடம்தான் அதிகாரம் உள்ளது. அவர்கள்தான் எதிர்காலத்தை தீர்மானிக்கிறார்கள். பாலஸ்தீன போராட்டடத்தில் பெண்களுக்கு முக்கிய இடம் உண்டு. அது தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும். ” என்று கூறினார். மேலும், வருங்காலத்தில் சட்டப் படிப்பை தேர்வு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.