உலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் சீன நிறுவனம்!

உலகின் மடிக்கூடிய ஸ்மார்ட்போனினை யார் வெளியிடுவது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. அதன் படி சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஹூவாய் நிறுவனத்திற்கு தேவையான வளையும் தன்மை கொண்ட OLED டிஸ்ப்ளேக்களை BOE தொழில்நுட்ப நிறுவனம் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஹூவாய் நிறுவனம் சாம்சங்-ஐ முந்தும் நோக்கில், முதற்கட்டமாக 20,000 முதல் 30,000 யூனிட்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தை முந்துவதை தவிர ஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் அறியப்படவில்லை. ஹூவாய் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 2019-ம் ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சந்தையில் முதலில் வெளியிட வேண்டும் என்ற நோக்கில் இருக்கும் பட்சத்தில் இந்த பேனல் சாம்சங் அளவு தயாராக இருக்காது என யுவான்டா முதலீடு நிபுணர் ஜெஃப் பு தெரிவித்தார்.

தொலைகாட்சி திரைகளை வழங்குவதில் BOE தொழில்நுட்பம் உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. மேலும் OLED ரக டிஸ்ப்ளேக்களை அதிகளவு தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஹூவாயின் மர்ம ஸ்மார்ட்போனின் விலை சார்ந்து எவ்வித தகவலும் இல்லை.

ஏற்கனவே ஹூவாய் நிறுவனத்தின் மர்ம மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் கசிந்திருந்தது. முன்னதாக எல்ஜி நிறுவனத்துடன் இணைந்து மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவாதக தகவல் வெளியானது.