ரணிலின் வருகையை புறக்கணிக்கிறது ஏறாவூர் நகரசபை!

நாளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரம சிங்கவின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள மட்டக்களப்பு- ஏறாவூர் பிரதேச செயலகக் கட்டடத் திறப்புவிழா நிகழ்வில் ஏறாவூர் நகர சபையின் முதல்வர் உட்பட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கலந்துகொள்ளாது புறக்கணிக்கத் தீர்மானித்தள்ளதாக நகர முதல்வர் ஐ.அப்துல் வாசித் தெரிவித்தார்.

இதேவேளை பிரதமரின் வருகையினை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் எவ்வித பணிகளிலும் நகர சபை ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவதில்லையென்றும் முடிவுசெய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இக்கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க வருகை தரவுள்ள நிகழ்விற்கான அழைப்பிதழில் ஏறாவூர் நகர சபை முதல்வரின் பெயர் உள்வாங்கப்படாதுள்ளமை குறித்து உறுப்பினர்கள் கண்டனம் வெளியிட்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நிருவாகத்தின்கீழ் இயங்கும் பிரதேசத்திற்கு அக்கட்சியின் தலைவர் வருகை தரவுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றபோதிலும் அதே கட்சியின் உள்ளுராட்சிமன்றத் தலைவரது பெயர் அழைப்பிதழில் திட்டமிட்டுப்புறக்கணிக்கப்பட்டுள்ளமை வேதனை தருவதாக உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

குறிப்பாக ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் இங்குள்ள அரசியல்வாதியொருவரது கையாளாக செயற்படுவதனால் நகர சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பல இடங்களில் புறக்கணிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது.