அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் சஃபாரி சுற்றுலா!

கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், சஃபாரி சுற்றுலாவை மேற்கொள்ளக்கூடிய வசதி கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இனி வரும் காலங்களில் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யும் சுற்றலாப் பயணிகளுக்கு அறுகம் குடா மற்றும் திருகோணமலை போன்ற நகரங்களில் சுற்றுலா மேற்கொள்வதற்கு மேலதிகமாக, பானம பகுதியிலும் சஃபாரி சுற்றுலா மேற்கொள்ள முடியும்.

அறுகம் குடாவிலிருந்து 14 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாக பானம திகழ்வதுடன் கொழும்பிலிருந்து 8 மணிநேரத்தில் பயணம் செய்யக்கூடியதாக இருக்கும். இந்தப் பகுதியில் காணப்படும் சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக சஃபாரி பானம காணப்படுகிறது.

வனவிலங்கு சஃபாரி (குமண தேசிய பூங்கா) மற்றும் கடற்கரையோர முகாமிடல் போன்றன சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவமாக அமைந்திருக்கும். எதிர்பாராத விதமாக பானம நகரில் இந்த பிரத்தியேகமான சுற்றுலா மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையின் சுற்றுலாத்துறையை பன்முகப்படுத்துவதற்கு பங்களிப்பை வழங்கும் அவுஸ்திரேலிய Market Development Facility (MDF) நிகழ்ச்சித் திட்டத்தினூடாக இந்த திட்டம் இனங்காணப்பட்டிருந்தது.

பானம சுற்றுலா பகுதியின் நிறுவுகையுடன், இலங்கைக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கும் பிரத்தியேகமான இலங்கை சுற்றுலா அனுபவங்களுக்கு மற்றுமொரு உள்ளம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

சஃபாரி பானம உரிமையாளரும், பானம பகுதியின் சுற்றுலாப் பகுதியின் பிரதம தொழில் முயற்சியாளருமான பிரியந்த புஷ்பகுமார கருத்துத் தெரிவிக்கையில்,

பானம பகுதியில் நாம் பல தங்குமிடங்களை கொண்டுள்ளோம். இவற்றில் பெரும்பாலானவை பெண்களால் வழிநடத்தப்படுகின்றன. இவர்களின் கணவர் நாள் கூலிவேலை அல்லது கடற்றொழிலில் ஈடுபடுகின்றனர். இந்த தங்குமிட பகுதிகளில் வசதிப்பதற்கு பெருமளவான சுற்றுலாப் பயணிகள் விரும்புவார்கள், ஏனெனில் அவர்களுக்கு இல்லம்சார்ந்த அனுபவத்தை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். குறிப்பாக வீடுகளில் தயாரிக்கப்பட்ட உணவுகளை அருந்தி மகிழ முடியும் என்றார்.

மெதுவாக சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபல்யமடைந்து வரும் இந்த சுற்றுலாப் பகுதியில் அமைந்துள்ள தங்குமிடங்கள் இயற்கையான உள்நாட்டு சிறப்பம்சத்தை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளன. பானம சுற்றுலாப் பகுதிக்கான பயண முகவராகவும், சுற்றுலா வழிகாட்டியாகவும் பிரியந்த செயலாற்றுகிறார்.

தமது வனவிலங்கு மற்றும் முகாமிடலில் அக்கறை கொண்டுள்ள சுற்றுலாப் பயணிகளை இந்த தங்குமிடங்களை பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்கிறார். MDF உதவியுடன், பிரியந்த தமது நிலையை முறைமைப்படுத்துவதில் செயலாற்றியிருந்தார். இந்த சுற்றுலாப் பகுதி அறிமுக நிகழ்வில், 7 தங்குமிடங்களின் பெண் உரிமையாளர்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. இவர்களின் தங்குமிட பகுதிகளை சஃபாரி பானம உத்தியோகபூர்வமாக பிரச்சாரம் செய்யும். நியமப்படுத்தப்பட்ட கட்டணங்கள் மற்றும் துரித சேவை வழங்கல்களை இவர்கள் மேற்கொள்வார்கள். மேலும், சஃபாரி பானம ஊடாக, தனிப்பட்ட சஃபாரி ஜீப் வண்டிகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் வலையமைப்பு உருவாக்கப்படுவதுடன், இதனூடாக சுற்றுலாப் பயணிகளுக்கு கடற்கரை அல்லது குமண வனப்பகுதிக்கு பாதுகாப்பான மற்றும் தங்கியிருக்கக்கூடிய போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படும்.

இந்த நிகழ்வில் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரைஸ் ஹட்சிசன், சுற்றுலா அனுகூலங்களை சமூகத்தாருக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை வரவேற்றிருந்தார்.

பானம திட்டத்தை பொறுத்தமட்டில், இலங்கையின் வளர்ந்து வரும் சுற்றுலாச் சந்தையில் இணைந்து கொள்வதற்கு சிறந்த வழிமுறையாக அமைந ;துள்ளது. தாம் பிரவேசிப்பதற்கு பெருமளவு தடைகளை எதிர்நோக்கும் ஒரு துறையில் பெண்களுக்கு பிரவேசிப்பதற்கான சிறந்த வாய்ப்பாகவும் அமைந்துள்ளது என்றார்.

சுற்றுலாத்துறையில் பெண்களின் தொழில் ஈடுபாடு மிகவும் குறைந்தளவில் காணப்படுகின்றது. இதில் பல்வேறு காரணங்கள் அடங்கியுள்ளன. வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுடன் பெண்கள் பணியாற்றுகின்றமை தொடர்பில் சமூகமட்டத்தில் காணப்படும் பார்வைகள் மற்றும் பாரம்பரிய பணியாற்றும் நேரம் தவிர்ந்த காலப்பகுதியில் செயலாற்ற வேண்டியிருக்கின்றமை காரணமாக வீட்டுப் பொறுப்புகளை கையாள்வதில் காணப்படும் சிக்கல்கள் போன்றன இவற்றில் அடங்குகின்றன.

தங்குமிட வசதியை செயற்படுத்துவதனூடாக அவர்களுக்கு மற்றுமொரு பகுதிக்கு செல்ல வேண்டிய தடைநீக்கப்பட்டுள்ளது. பானம கிராமத்தில் பெண்கள் குழுவினராக இணைந்து இந்த தங்குமிட வசதிகளை வழங்குகின்றமை காரணமாக, சமூகத்தில் அதற்கான வரவேற்பும் எழுந்துள்ளது.

இலங்கையின் சுற்றுலாத்துறையை பன்முகப்படுத்துவதில் அவுஸ்திரேலியாவின் MDF பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்த மாதிரியின் முக்கிய அங்கமாக, பிரியந்தவின் வியாபாரம் போன்ற சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டு, சுற்றுலாத்துறையுடன் இணைப்பை மேற்கொள்ள முடியாத நிலையில் அல்லது அதனூடாக அனுகூலம் பெற முடியாத நிலையில் காணப்படுவோருக்கு பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வர்த்தகங்களை இனங்காண்பது அமைந்துள்ளது.

சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் MDF இலங்கையில் இயங்குகிறது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் பன்னாட்டு தனியார் துறை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமாக MDF அமைந்துள்ளது. பபுவா நியு கீனி, ஃபிஜி, திமோர்-லெஸ்ட், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இயங்கி வருகிறது.

இலங்கையில் MDF இனால் சுமார் 145 தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், 2016 மற்றும் 2017 காலப்பகுதியில் சுமார் 5000 மக்களின் வருமான மட்டத்தை அதிகரித்திருந்தது.

இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் இலங்கைக்கு பிரத்தியேகமான பொருட்கள் ஆகியவற்றை பிரபல்யப்படுத்தும் வகையில் தனியார் மற்றும் பொது அமைப்புகளுடன் கைகோர்த்து MDF செயலாற்றுகிறது. இலங்கையில் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சிகள் பற்றி மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள ஆனுகுஇன் இணையத்தளத்தை பார்க்கவும்