மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை!

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணை கொள்முதல் செய்யாவிட்டால் மத்திய கிழக்கு நாடுகள் பெட்ரோல் ஏற்றுமதி செய்வதை தடுப்போம் என்று கூறிய ஈரான் அதிபருக்கு ஆதரவு பெருகியுள்ளது.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.
ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணை கொள்முதல் செய்ய கூடாது என அமெரிக்கா நேரடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கு பதிலடி தரும் வகையில் சமீபத்தில் கருத்து தெரிவித்த ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானி, ’ஈரானிடம் இருந்து கச்சா எண்ணை கொள்முதல் செய்யாவிட்டால் மேற்கத்திய நாடுகளுக்கு மத்திய கிழக்காசிய துணைகண்டத்தில் உள்ள இதர 15 நாடுகள் பெட்ரோல் ஏற்றுமதி செய்வதை ஈரான் தடுத்து நிறுத்தும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேற்கத்திய நாடுகளுக்கு எண்ணை கப்பல்கள் செல்லும் ஹோர்முஸ் ஜலச்சந்தியை மறித்து, தடை செய்யப்போவதாக முன்னர் ஈரான் அரசு தெரிவித்திருந்தது.
ரவுகானியின் இந்த கருத்துக்கு ஈரான் நாட்டின் மூத்த மதத்தலைவரான அயாத்துல்லா அலி கமேனி ஆதரவு தெரிவித்துள்ளார். அதிபர் ஹஸன் ரவுகானியின் இந்த கருத்தை ஈரான் அரசின் அணுகுமுறைக்கு சிறந்த முன்னுதாராணமாக கருத வேண்டும் என கமேனி குறிப்பிட்டுள்ளார்.