ஆஸ்திரேலிய கடல்வழியை பரிசோதித்த ஆட்கடத்தல்காரர்கள் நடுக்கடலில் சிக்கினர்!

இந்தோனேசியா/ ஆஸ்திரேலியா: படகு வழியாக ஆஸ்திரேலியா அடையும் முயற்சியில் ஈடுபட்ட ஆட்கடத்தல்காரர்கள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள், ஆஸ்திரேலியா எல்லையை நெருங்கியிருந்த நிலையில் அந்நாட்டு கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். 

இந்தோனேசியாவை சேர்ந்த 3 பேரையும் சீனாவை சேர்ந்த 7 பேரையும் கொண்டிருந்த அப்படகு, பின்னர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவை ஆளும் டர்ன்புல் அரசாங்கத்தின் எல்லைப் பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில் கடந்த ஜூன் மாத மத்தியில் இப்படகு திருப்பி அனுப்பப்பட்டதாக ‘தி டெய்லி டெலிகிராப்’ என்ற ஆஸ்திரேலியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

கடந்த டிசம்பர் 2017க்கு பிறகு, ஆஸ்திரேலியா எல்லைக்கு மிக நெருக்கமாக ஒரு படகு வந்திருப்பது இதுவே முதன்முறையாகும். ஆஸ்திரேலியாவின் கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கை நடைமுறைக்கு வந்த பின்னர், பல நாடுகளின் அகதிகளை/ தஞ்சக்கோரிக்கையாளர்களை தாங்கி வந்த 33 படகுகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. 

ஆசியாவிலிருந்து கடல் வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயற்சிக்கும் அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு ‘இந்தோனேசியா’ முக்கியமான இணைப்பு நாடாக இருக்கின்றது. ஒன்று, இந்தோனேசியாவை படகுக்கு எரிப்பொருள் நிரப்புவதற்கான இடமாகவோ, இல்லையெனில் இந்தோனேசியாவுக்கு வான்வழியாக வந்தபின் அங்கிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயற்சிப்பது வழக்கமானதாக இருக்கின்றது. இப்படி, கடந்த ஜூலை 2016ல் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 44 இலங்கை தமிழ் அகதிகள் படகு பழுதாகி இந்தோனேசியாவில் கரை ஒதுங்கினர். 

இப்படி, ஆஸ்திரேலியா செல்ல முயன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த 14,000 அகதிகள் இன்றும் இந்தோனேசியாவின் தற்காலிக முகாம்களில் வசித்து வருகின்றனர். 

இப்போதைய சம்பவம் என்பது ஆஸ்திரேலியா கடல்வழியை பரிசோதிப்பதற்கான ஆட்கடத்தல்காரர்களின் முயற்சி என பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், “ஆட்கடத்தல்காரர்கள் தங்கள் வேலையை இன்னும் நிறுத்தவில்லை என்பதற்கு இது மற்றுமோர் உதாரணம். நமது எல்லைப் பாதுகாப்பு கொள்கைகள் வலுவானதாக இல்லையெனில் நூற்றுக்கணக்கான படகுகள் வந்து சேர்ந்த மோசமான நாட்களுக்கு திரும்பி விடுவோம்” எனக் கூறியுள்ளார். 

ரோஹிங்கியா அகதிகள், தமிழ் அகதிகள், ஆப்கான் மற்றும் ஈரான் அகதிகள் படகு வழியாக தஞ்சமடைவதே வழக்கமானதாக இருந்து வந்தது. ஆனால், ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் எண்ணத்தில் சீனர்கள் வருவது புதிதான ஒன்றாகும்.