டெனீஸ்வரனின் அமைச்சுப்பதவி குறித்து ஆராயும் விசேட அமர்வில் முதலமைச்சர் கொள்ளவில்லை!

வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சராக டெனீஸ்வரன், சட்டப்படி வடக்கு மாகாண அமைச்சரவையில் தொடர்ந்து நீடிக்கிறார் என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய கட்டளையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் மாகாண சபையின் இன்றைய சிறப்பு அமர்வில் முதலமைச்சர் உட்பட ஏனைய 5 அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை. வட மாகாண சபையின் 127 வது அமர்வின் விசேட அமர்வு இன்று யாழ். கைதடியில் உள்ள பேரவைச்செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது.

கடந்த யூலை 10ம் திகதி வடக்கு மாகாண சபையின் 19 உறுப்பினர்கள் எழுத்துமூலம் கோரியதற்கு அமைவாக அவைத்தலைவரால் இதற்கான அறிவிப்பு சபையில் விடுக்கப்பட்ட நிலையில் இன்று விசேட அமர்வு நடைபெறுகின்றது. இவ்விடயம் உயர் நீதிமன்றில் உள்ள படியால் தான், இதில் கலந்து கொள்ளவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் புறக்கணிக்கணிப்பதாக, அவைத் தலைவருக்கு கடிதம் மூலம் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் மாகாண போக்குவரத்து அமைச்சரான பா. டெனீஸ்வரன் இவ் அமர்வில் கலந்து கொண்ட போதிலும் அவர் அங்கம் வகிக்கும் ரெலோ அமைப்பின் ஏனைய ஐந்து உறுப்பினர்களும் அமர்வில் கலந்து கொண்டிருந்த போதும், மேற்படி விவாதத்தில் தாம் பங்கு கொள்ளவில்லை என தெரிவித்து அமர்வில் இருந்து வெளியேறினர். அதைத் தொடர்ந்து அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் இந்த விசேட அமர்வை ஆரம்பித்தார்.

ஏனைய மாகாண அமைச்சர்கள் எவரும் பங்கு கொண்டிராத நிலையில் 19 உறுப்பினர்களுடன் இந்த விவாதம் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.