நவுறு தடுப்பு முகாமிலிருந்து தமிழ்க் குடும்பம் உட்பட சில அகதிகள் அமெரிக்கா சென்றனர்!

அவுஸ்திரேலியாவின் நவுறு தடுப்பு முகாமிலுள்ள மேலும் சில அகதிகள் அமெரிக்கா சென்றுள்ளனர். ஒரு தமிழ் குடும்பம் உட்பட ஆப்கான், பாகிஸ்தான் மற்றும் ரொஹின்யா பின்னணி கொண்ட சுமார் 22 பேருகு அமெரிக்கா செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து இவர்கள் அனைவரும் அமெரிக்கா சென்றதாக Refugee Action Coalition அமைப்பின் பேச்சாளர் Ian Rintoul கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் அகதிகள், அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்படுவார்கள்.

அங்கு செல்லும் அகதிகளுக்கு முதல் 3 மாதங்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்படும். மேலும் ஒரு வருடத்தின் பின் அவர்கள் அங்கு நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்குத் தகுதி பெறுவர்.

பின்பு 5 வருடங்கள் கழித்து அமெரிக்க குடியுரிமை பெறமுடியும் என்பது சுட்டிக்காட்டதக்கது. இதேவேளை அமெரிக்கா- அவுஸ்திரேலியா இடையே செய்துகொள்ளப்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின்படி இவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.