நாடாளுமன்றத்தைக் குலுக்கிய அந்த நான்கு வார்த்தைகள்!

யாழ்ப்­பா­ணம்–வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் இடம்­பெற்ற அர­ச­த­லை­வர் மக்­கள் சேவை நிகழ்­வின்­போது இரா­ஜாங்க அமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் ஆற்­றிய உரை­யில் வெளி­யி­டப்­பட்ட நான்கு வார்த்­தை­கள் பெரும் பூகம்­ப­மாக மாறி, ஊட­கங்­க­ளி­லும், சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் வானேறி, நாடு முழு­வ­தும் இர­வோ­டி­ர­வா­கப் பரந்து அடுத்த நாளில் இடம்­பெற்ற நாடா­ளு­மன்ற அமர்­வையே அதிர்ந்து குலுங்க வைத்­து­விட்­டன.

அந்த வார்த்­தை­கள் ஒன்­றி­ணைந்து எதிர்க்­கட்­சி­யி­னர், பதி­னான்கு பேர்­கள் கொண்ட அணி, அரச தரப்­பி­னர், மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யி­னர் என எவ­ரை­யும் விட்­டு­வைக்­கா­மல் கொதித்­தெழ வைத்­து­விட்­டன.

பாது­காப்­புப் பிர­தி­ய­மைச்­சர் ருவான் விஜ­ய­வர்த்­தனா அவை உண்­மைக்­குப் புறம்­பா­னவை என்­றும் அதற்­கெ­தி­ரா­கக் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மெ­ன­வும் தெரி­வித்­தார். ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் அமைச்­சர்­க­ளில் ஒரு­வ­ரான பைசல் முஸ்­தபா அது கட்­சி­யின் கருத்­தல்ல எனத் திட்­ட­வட்­ட­மா­கத் தனது மறுப்பை வெளி­யிட்­டார். ஜே.வி.பியின் விஜித ஹேரத் தேசத்­தி­டம் மன்­னிப்­புக் கேட்­க­வேண்­டு­மென முழங்­கி­னார்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தயா­சிறி விஜ­ய­சே­கரா விஜ­ய­க­லாவை நாடா­ளு­மன்­றத்தை விட்டு வெளி­யேற வேண்­டு­ மெ­னப் பொங்­கி­யெ­ழுந்­தார். ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹரின் பெர்­னாண்டோ அது கட்­சி­யின் கருத்­தல்ல என்­றும் விஜ­ய­கலா மீது ஒழுங்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­ம் என­வும் தெரி­வித்­தார்.

இவ்­வாறு அரச தரப்­பி­னர், விஜ­ய­கலா பேசி­யி­ருந்த வார்த்­தை­கள் தேச­வி­ரோ­த­மா­னவை என்ற பாணி­யி­ல் பேச, ஐக்­கிய தேசி­யக் கட்­சி­ அதற்­கும் தங்களுக்கும் சம்­பந்­த­மில்­லை­யெ­ன­வும் வலி­யு­றுத்த நாடா­ளு­மன்­றத்­தில் அம­ளி­து­மளி தொடர்ந்­தது.

விசா­ர­ணை­க­ளும் குழப்­பங்­க­ளும்

இந்த நிலை­யில் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் வெளி­யிட்ட கருத்­துக்­கள் அர­ச­மைப்­பின் ஏழா­வது விதிக்கு விரோ­த­மா­னதா என்­பது தொடர்­பாக சபா­நா­ய­கர் ஆராய்ந்து அது தொடர்­பாக நட­வ­டிக்கை எடுக்­கும்­படி அறி­வித்­துள்­ள­தா­கத் தெரி­வித்­தார். ஆனால், மகிந்த அணி­யி­னரோ, விமல் வீர­வன்ச அணி­யி­னரோ அடங்­கிப் போக­வில்லை.

தொடர்ந்து குழப்­பங்­களை விளை­ வித்­த­து­டன் ஒரு கட்­டத்­தில் செங்­கோ­லை­யும் தூக்க முயன்­ற­னர். ஆனால், நாடா­ளு­மன்­றச் சேவ­கர்­க­ளின் தலை­யீட்­டால் அது தடுத்து நிறுத்­தப்­பட்­டது. எது­வுமே செய்ய முடி­யாத நிலை­யில் சபா­நா­ய­கர் நாடா­ளு­மன்ற அமர்வை இடை­நி­றுத்­தி­னார். அரை மணி­நே­ரம் கழித்து மீண்­டும் சபை அமர்வு ஆரம்­பிக்­கப்­பட்­ட­போது சமாந்­த­ர­மா­கக் குழப்­ப­மும் தொடங்­கி­விட்­டது.

வேறு­வ­ழி­யின்றிச் சபா­நா­ய­கர் சபையை அடுத்­த­நாள் வரை ஒத்­தி­வைத்­தார். நான்கு வார்த்­தை­கள், செய­லல்ல, வாயி­லி­ருந்து வெளி­யே­றிய வெறும் வார்த்­தை­கள் ஒரு நாட்­டின் நாடா­ளு­மன்­றத்­தின் கத­வு­களை இழுத்­துப் பூட்ட வைத்­து­விட்­ட­ன­வென்­றால், அந்த வார்த்­தை­கள் அவ்­வ­ளவு வலிமை வாய்ந்­த­வையா என எண்­ணத் தோன்­று­கி­றது.

சக்தி மிக்க வார்த்­தை­கள்

‘புலி­கள் மீண்­டும் உரு­வாக வேண்­டும்’ இவை­தான் அந்­தச் சக்தி வாய்ந்த வார்த்­தை­கள். இந்த வார்த்­தை­கள் நாடா­ளு­மன்ற அமர்வை இடை­நி­றுத்­தி­ய­து­டன் நின்­று­வி­ட­வில்லை. சபைக்கு வெளி­யே­யும் பல பிர­தி­ப­லிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தின. வட­மேல் மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள் இந்த வார்த்­தை­க­ளைக் கண்­டித்து கறுப்­புப் பட்­டி­ய­ணிந்து சபை அமர்­வில் கலந்­து­கொண்­டி­ருந்­த­னர். சிஹல உறு­மய உட்­பட மூன்று சிங்­கள பௌத்த தீவி­ர­வாத அமைப்­புக்­கள் விஜ­ய­கலா மீது முறைப்­பாடு செய்­துள்­ளன. இவை தொடர்­பாக விசா­ரிக்­கும்­படி சிறப்­புக் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வுக்­குப் பொலிஸ் மா அதி­பர் பணிப்­புரை ஒன்றை வழங்­கி­யுள்­ளார்.

விஜ­ய­க­லா­வுக்­கான ஆத­ரவு அணி

இந்த நான்கு வார்த்­தை­க­ளா­லும் தமது கட்­சி­பே­தங்­களை மறந்து பல தரப்­பி­ன­ரும் ஒன்று சேர்ந்­துள்ள வேளை­யில் மனோ கணே­சன் மட்­டும், ‘‘விஜயகலா­வின் கோபம் நியா­ய­மா­னது’’ என அடித்­துக் கூறி­யுள்­ளார். அதே­போன்று சுகா­தார அமைச்­சர் ராஜித சேன­ரத்­ன­வும் விஜ­ய­க­லா­வுக்கு ஆத­ர­வா­கக் கருத்து வெளி­யிட்­டுள்­ளார். முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ர­னும் விஜ­ய­க­லா­வின் கூற்று நியா­ய­மா­னது எனச் சில ஆதா­ரங்­க­ளு­டன் கூறி­யுள்­ளார். அதா­வது புலி­க­ளின் காலத்­தில் சூரி­யன் அஸ்­த­ம­மான பின்­பும் ஒரு பெண் நகை­கள் அணிந்தபடி பய­மின்றி வீதி­யால் போகும் நிலை இருந்­த­தென அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் எந்­த­வித கருத்­தை­யும் வெளி­யி­ட­வில்லை.

இறு­தி­யில் திரு­மதி விஜ­ய­கலா தலைமை அமைச்சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வைச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டிய பின்பு தனது இரா­ஜாங்க அமைச்­சர் பத­வி­யைத் தானே துறந்­துள்­ளார்.

விஜ­ய­கலா விட­யத்­தில் மாத்­தி­ரம் ஏன் கவ­னம்?

நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­த­மைக்­கா­கச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுப் பின் பிணை­யில் விடு­விக்­கப்­பட்ட கல­கொட அத்த ஞான­சார தேரர் நடத்­திய ஊடக சந்­திப்­பில் ‘ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஒரு தந்­தி­ர­மான நரி என்­றும் – பிர­பா­க­ரன் அதைச் சொல்­லும்­போது தாங்­கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என­வும் இப்­போது தாங்­கள் பிர­பா­க­ர­னின் கூற்றை ஏற்­றுக்­கொள்­வ­தா­க­வும் தெரி­வித்­தி­ருந்­தார். மேலும் ரணிலோ, மஹிந்­தவோ, மைத்­தி­ரியோ நாட்டை ஆளும் தகு­தி­யற்­ற­வர்­கள் என­வும் தெரி­வித்­தி­ருந்­தார்.

ஞான­சா­ரர் பிர­பா­க­ர­னைப் புகழ்ந்­து­ரைத்­தது பற்றி தற்­ச­ம­யம் விஜய கலா­வுக்கு எதி­ராக துள்­ளிக் குதிப்­ப­வர்­கள் எவ­ரும் வாயைத் திறக்­க­வில்லை. யாழ்ப்­பா­ணத்­தில் இடம்­பெற்ற ‘நீதி­ய­ர­சர் பேசு­கி­றார்’ என்ற புத்­தக வெளி­யீட்டு விழா­வில் உரை­யாற்­றிய எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்­தன் விடு­த­லைப் புலி­க­ளின் ஆயு­தப் போராட்­டம் தொடர்ச்­சி­யான ஒடுக்­கு­மு­றை­கள் கார­ண­மா­கவே உரு­வா­ன­தெ­ன­வும், அது தோற்­க­டிக்­கப்­பட்­டா­லும் அதன் நியா­யத்தை யாரும் மறுத்து விட முடி­யா­தெ­ன­வும் தெளி­வா­கவே தெரி­வித்­தி­ருந்­தார். அங்கு உரை­யாற்­றிய வட மாகாண முத­ல­மைச்­சர் சி.வி. விக்­னேஸ்­வ­ர­னும் பிர­பா­க­ர­னின் இலட்­சி­யம் மழுங்­க­டிக்­கப்­ப­டக் கூடாது எனத் தெரி­வித்­தி­ருந்­தார்.

ஆனால் சம்­பந்­தர் பற்­றியோ, விக்­னேஸ்­வ­ரன் பற்­றியோ எவ­ரும் கண்­ட­னக் குரல்­களை எழுப்­ப­வில்லை. ஏன் திரு­மதி விஜ­ய­க­லா­வுக்கு எதி­ராக இவ்­வ­ளவு பெரும் எதிர்ப்பு என்ற கேள்வி எழு­வது தவிர்க்க முடி­யா­த­தா­கும்.

விஜ­ய­கலா பேசிய உரை­யின் சாரம்­சம் இது­தான்

‘ஒரு ஆறு­வ­ய­துச் சிறுமி பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுப் பின் கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றாள். ஒரு பெண் கண­வ­னின் முன்­னி­லை­யில் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளாள். பெண்­ணின் வேத­னை­யைப் பெண்­க­ளா­லேயே உண­ர­மு­டி­யும். நாம் அச்­ச­மின்றி நிம்­ம­தி­யாக வாழ வேண்­டு­மா­னால் மீண்­டும் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் உரு­வாக வேண்­டும். ஒரு அர­சி­யல்­வா­தி­யின் செல்­வாக்­கி­லேயே பல மதுக் கடை­க­ளுக்கு உரி­மம் வழங்­கப்­பட்­டது. இன்று பல குற்­றங்­க­ளுக்­குப் போதையே கார­ண­மா­யுள்­ளது’ எந்­த­வொரு தமி­ழ­ரைப் பார்த்­தும் இந்த உரை­யில் ஏதா­வது தவறு உள்­ளதா? என்று கேட்­டால் ஒரு சிறு தவ­றும் இல்லை என்றே பதில் வரும். ஏன் இத­ய­சுத்தி உள் மாற்­றி­னத்­த­வர்­க­ளும் தவ­றில்லை என்றே சொல்­வர். பொலி­ஸா­ரின் நட­வ­டிக்­கை­க­ளில் மக்­கள் நம்­பிக்கை இழந்­துள்­ள­னர் என்­பது மறுக்க முடி­யாத உண்மை.

அரசு மீது நம்­பிக்கை அற்­ற­தன் வெளிப்­பாடே இது

மல்­லா­கம் சகாய மாதா கோயி­லில் இடம்­பெற்ற சம்­ப­வத்­தில் இளை­ஞர் ஒரு­வர் பொலி­ஸா­ரின் துப்­பாக்­கிச் சூட்­டி­டால் உயி­ரி­ழந்­தார். காயப்­பட்­ட­வர்­களை மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்ற பொது மக்­கள் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­ட­னர். சூடு நடத்­திய பொலிஸ் அதி­காரி நீதி­மன்­றில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. கொக்­கு­வி­லில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் மேல் துப்­பாக்­கிச் சூடு மேற்­கொண்ட சந்­தே­க­ந­பர்­க­ளில் மூவர் அரச தரப்­புச் சாட்­சி­யாக மாற்­றப்­பட்­டுப் பிணை­யில்வி டப்­பட்­டுள்­ள­னர். புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா கொலை­யின் முக்கிய சந்­தேக நபர் கொழும்­புக்­குத் தப்­பி­யோ­டு­வ­தற்கு உத­வி­ய­தா­கப் பொலிஸ் அதி­காரி தேடப்­பட்டு வரு­கி­றார்.

காரை­ந­க­ரல் சிறுமி ஒருத்தி கடற்­ப­டைச் சிப்­பாய் ஒரு­வ­ரால் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட வழக்­கில் சந்­தே­க­ந­பர் இல்­லா­மல் வேறு நபர்­கள் அடை­யாள அணி வகுப்­புக்கு நிறுத்­தப்­பட்ட சம்­ப­வ­மும் அம்­ப­லத்­துக்கு வந்­தி­ருந்­தது. எத்­த­னையோ கொலைக் குற்­றங்­கள் தொடர்­பா­ன­வர்­கள் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. பல கொலைக் குற்­ற­வா­ளி­கள் நாட்­டை­விட்­டுத் தப்­பி­யோ­டி­விட்­ட­னர். இப்­ப­டி­யான நிலை­யில் மக்­கள் எப்­ப­டிப் பொலி­ஸாரை நம்ப முடி­யும்? நீதி­யை­யும், அமை­தி­யை­யும், அச்­ச­மின்­மை­யை­யும் விரும்­பும் ஒரு­வர் விடு­த­லைப் புலி­கள் மீண்­டும் உரு­வாக வேண்­டு­மென விரும்­பு­வ­தில் என்ன பிழை?

விஜ­ய­க­லா­வைக் குற்­ற­வா­ளி­யாக்கி விரல் நீட்­டு­வோர் விடு­த­லைப் புலி­கள் காலத்­தைப்­போன்று சட்­ட­வி­ரோ­தச் செயல்­களை ஒழிக்­க­மு­டி­யு­மென உத்­த­ர­வா­தம் செய்ய முடி­யுமா?

அந்த நாலு வார்த்­தை­க­ளைக் கண்டு துள்­ளிக் குதிக்­கும் பேர் வழி­கள் கொலை, களவு, பாலி­யல் வன்­பு­ணர்வு, வாள்வெட்டுக்கள் போன்ற சட்­ட­வி­ரோ­தக் குற்­றங்­களை இல்­லா­தொ­ழிப்­பார்­களா? அது சாத்­தி­ய­மில்லை? ஏனெ­னில் அவர்­க­ளில் பல­ரும்­தான் இப்­ப­டி­யான குற்­றங்­கள் தொடர்­பாக விசா­ர­ணை­க­ளுக்கு முகம் கொடுப்­ப­வர்­கள். எப்­ப­டி­யி­ருப்­பி­னும் இவர்­கள் தங்­கள் எதிர்ப்­பின் மூலம் அந்த வார்த்­தை­க­ளின் வலி­மையை ஏற்­றுக்­கொண்டு விட்­ட­னர் என்­பதே உண்மை.

நன்றி- உதயன்