வடக்கில் சட்டத்தை அமுல்படுத்த கூட்டமைப்பே தடையாகவுள்ளதாம்!

வடக்கில் சட்ட ஒழுங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வட மகாண சபை உறுப்பினர்களுமே தடையாக உள்ளனர் என அட்மிரல் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கிழக்கில் விடுதலை புலிகளின் ஆதிக்கம் மீண்டும் தலைத்தோங்க வேண்டும் அப்போதே தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ முடியும் என்று சிறுவர் பாதுகாப்பு மற்றும் மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் குறிப்பிட்டுள்ளமையானது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயம்

வடக்கில் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக சிறுவர் துஷ்பிரயோகங்களும் வன்கொடுமைகளும் நாளாந்தம் இடம்பெற்றதாகவே காணப்படுகின்றது. மகளிர் விவகாரம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைகள் இப் பிரதேசங்களில் முழுமையாக நடைமுறைப்டுத்தப்பட்டிருந்தால் இவ்வாறான நிலைமைகள் ஒருபோதும் தோற்றம் பெற்றிருக்காது.

தெற்கில் நடைமுறையில் உள்ள சட்ட ஒழுங்கு வடக்கில் அமுல்படுத்த முடியாமைக்கு பிரதான காரணம் என்வெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வட மகாண சபை உறுப்பினர்களுமே ஆவர்.

இவ்வாறான அரசியல்வாதிகள் என்ன நோக்கத்துடன் செயற்படுகின்றார்கள் என்பது குறித்து எவரும் யூகிக்க முடியாத நிலைப்பாடே காணப்படுகின்றது. தமிழ் மக்களுக்கு அவர்களது உரிமைகளை தருவதாக குறிப்பிட்டு அவர்களை தொடர்ந்து பாதிப்புக்குள்ளாக்கியே வருகின்றனர் என்றார்.