பழங்களைப் பழுக்க வைக்க வியாபாரிகள் இரசாயன முறையைக் கையாளுகின்றார்கள்!

வேகமான வாழ்க்கை முறையால் தற்போது பழங்களைப் பழுக்க வைக்க வியாபாரிகள் இரசாயன முறையைக் கையாளுகின்றார்கள்.

இப்பழங்களை உண்பதால் வாயில் புண் வயிற்றுப் போக்கு, ஒவ்வாமை போன்ற வியாதிகள் ஏற்பட்டு நாளடைவில் குடல் புற்று நோய் வர வாய்ப்புண்டு. இதற்குக் காரணம் காய்களைப் பழுக்க வைக்க வணிகர்களால் பயன் படுத்தப்படும் கல்சியம் கார்பைடு என்னும் இரசாயனம்தான்என கண்டறியப்பட்டுள்ளது.அது புற்றுநோயை உண்டாக்கக்கூடியது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இயற்கையில் காய் பிஞ்சுகளைமுற்றச் செய்வதும் பழுக்கச் செய்வதும் எதிலீன்என்னும் வாயு நிலை ஹோர்மோனே. இது எல்லாக் காய்களிலிருந்தும் இயற்கையாக வெளியேறும். இருந்தாலும் இது அப்பிள் எலுமிச்சை மற்றும் தோடங்காய்களிலிருந்து பெருமளவில் வெளியேறுவது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதை நமது அன்றாட நடைமுறை வாழ்க்கையுடன் இணைத்துப் பார்த்து விளங்கிக் கொள்ளலாம். பெட்டிக்குள் வைக்கோல் போட்டு அடைத்து வைத்த மாங்காய்களும் நிலத்தில் தாட்டுப் புகையடித்த வாழைக் குலைகளும் விரைவில் பழுப்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.

புகையினாலும் வைக்கோலினாலும் வெப்பம் அதிகரிக்க காய்களிலிருந்து இயற்கையாக வெளியேறும் எதிலீன் வாயு காய்களைப் பழுக்கச் செய்யும்.

வெளிநாடுகளில் வாழும் நம்மவர்கள் பலர் அழகுக்காக தோடை பேரை அப்பிள் பழங்களை தட்டங்களில் அடுக்கி அதன்மேல் வாழைப்பழச் சீப்பை வைத்துவிடுவார்கள். இதனால் வாழைப் பழங்கள் மேலும் கனிந்துவிடும்.

இதேபோல ஒரு பையில் எலுமிச்சங் காய்களையும் பிஞ்சு வெண்டிக்காயையம் போட்டுக் கட்டி வைத்தால் பிஞ்சு வெண்டிக்காய் முற்றிவிடும். இவை அனைத்துக்கும் காரணம் காய்களில் இருந்து இயற்கையாக வெளியேறும் எதிலீன் வாயுவே

வசதியுள்ள நாடுகளில் வாழும் மக்கள் பெருமளவு பழங்கள் சாப்பிடுவார்கள். இவர்களது உணவில் வாழைப்பழம் முக்கியமானது.

இதனால் தினம்தோறும் பல்லாயிரம் மெகாதொன் வாழைப்பழங்கள் சந்தைக்கு வரவேண்டும். இவற்றை ஒரே சீராகப் பழுக்கச் செய்ய மூடிய கூடாரங்களுள் காய்களை அடுக்கி சந்தைப் படுத்தலுக்கு முதல்நாள் எதிலீன் வாயு செலுத்தப்படும். காய்களிலிருந்து இயற்கையாக வெளியேறும் எதிலீன் வாயு பெரும்தொகையான காய்களை விரைவில் பழுக்கச் செய்யப் போதுமானதல்ல. இதனால் தேவைப்படும் பெருமளவு எதிலீன் வாயுவை எத்ரெலுடன் சுண்ணாம்பைக் கலப்பதன் மூலம் பெறப்படுகிறது.

இத் தொழில் நுட்பத்தின் வேறொரு வடிவமே கிராமங்களில் வாழைக் குலைக்கு சுண்ணாம்பு தெளித்து வாழைச் சருகுகளால் மூடிக்கட்டிப் பழுக்க வைக்கும் முறை.

செயற்கையாக தயாரிக்கப்பட்ட எதிலீன் வாயுவும் காய்களிலிருந்து இயற்கையாக வெளியேறும் எதிலீன் வாயு போன்று சௌக்கியத்துக்கு ஒருபோதும் கேடுவிளைவிப்பதில்லை.

எதிலீன் வாயு தயாரிப்பற்கு ஓரளவு தொழில் நுட்பம் தேவை. இதற்குப் பணம் செலவு செய்ய சிறு வணிகர்கள் விரும்புவதில்லை. இதனால் இலங்கை இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் இப்பொழுது காய்களைக் கனிய வைக்க கல்சியம் கார்பைடு என்னும் இரசாயனப் பொருளைப் பாவிக்கிறார்கள். இதைஇரும்பு ஒட்டப் பாவிப்பதால் இரும்புப் பட்டறைகளில்மலிவாகப் பெற்றுக் கொள்ளலாம்.

இதில் ஆர்செனிக் மற்றும் பொஸ்பரஸ் போன்ற நச்சு இரசபயனங்கள் கலந்திருக்க வாய்ப்புண்டு. மாமரங்களை வணிகர்கள் மரத்துடன் தீர்த்து வாங்குவதை அறிந்திருப்பீர்கள். இதன்மூலம் அவர்கள் விரைவாகப் பணம் சம்பாதிக்க முனையும் போது நமக்கான பிரச்சனையும் ஆரம்பிக்கிறது.

மொத்த வியாபாரிகள் பிஞ்சு அரைமுத்தல் முத்தல் என மாங்காய்களைப் பறித்து மூடிய அறைக்குள் குவித்துவிடுவார்கள். பின்னர் கல்சியம் கார்பைடு கற்களை பொட்டளியாகக் கட்டி மாங்காய்க் குவியலுக்குள் ஆங்காங்கே தாட்டு மாங்காய்க்குவியலுக்கு தண்ணீர் தெளித்து விடுவார்கள்.

மாற்றாக கல்சியம் கார்பைட்டை மாவாக்கி தண்ணீரில் கலந்தும் தெளிப்பார்கள். கல்சியம் கார்பைடு நீருடன் சேரும்போது அசற்றலீன் என்னும் வாயு வெளியேறி காய்களைக் கனிபோன்று தோற்றம் தரும் வகையில் நிறம் மாற்றும்.

கல்சியம் கார்பைடும் அதிலிருந்து வெளியெறும் அசற்றலீனும் மனித சௌக்கியத்துக்கு பெரிதும் தீங்கானவை. இப் பழங்களைச் சாப்பிட்டால் அடிக்கடி வயிற்றுப் போக்கு வயிறு மந்தம் சருமப் பிரச்னைகள் அல்சர் போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

கால்சியம் கார்பைடு கலந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் உண்டாகும். ethylin எனவே பழங்களை வாங்கும்போது கவனமாகப் பார்த்து வாங்க வேண்டியது மிக அவசியமாகிறது. பழங்கள் இயற்கையாகப் பழுத்தவையா அல்லது செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்டவையா என்று எப்படிக் கண்டறிவது

?செயற்கையாக பழுத்த பழங்கள் பளபளப்பாக மெல்லிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். காம்புப் பகுதியை கீறிமணந்தால் புளிப்புத் தன்மைக்கான மணம் வீசும். இயற்கையாகப் பழுத்த பழம்மெதுமையாக இருக்கும். ஆனால் செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட பழங்கள் திடமாகவும் கனமாகவும் இருக்கும்.

?கல்சியம் கார்பைடு மூலமாகப் பழுக்கும் பழங்கள் முறையான வடிவத்தில் பழுக்காமல் திட்டு திட்டாக பழுத்த தோற்றத்தில் நிறம் மாறி இருக்கும். வெட்டிப்பார்த்தால் உள்ளே மினுமினுப்பாக இருக்கும்

?பழத்தில் குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டும் தீப்பட்டதுபோல கறுப்பாக இருந்தால் அது கண்டிப்பாக கார்பைடு கல்லால் பழுக்க வைக்கப்பட்டது.

முக்கியமாக பழங்களை உண்டபின் வாயில் அரிப்பெடுத்தால் அந்தப் பழங்களை தொடர்ந்து உண்ணாதீர்கள்.

ஆசி கந்தராஜா,

விவசாய பேராசிரியர் ,

சிட்னி, அவுஸ்திரேலியா .