“நானும் தமிழ்ப் பெண் என்கிற ஒரு சிறப்பு போதுமே!” – தொகுப்பாளர் மமதி சாரி

அழகுத் தமிழ். தனித்துவ தேன் குரல். புன்னகைச் சிரிப்பு… என்று தனித்துவ அடையாளங்களுடன் மிளிர்பவர், மமதி சாரி. தொலைக்காட்சி தொகுப்பாளராக கலக்கியவர், சின்ன இடைவெளி எடுத்து அமைதியானார். தற்போது, சன் டிவி ‘வாணி ராணி’ சீரியலில் திடீர் வரவாக வந்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். இவருடன் உரையாடத் தொடங்கிய சில விநாடிகளிலேயே நமக்கும் தொற்றிக்கொள்கிறது உற்சாகம்.

“திடீரெனப் பெரிய இடைவெளி ஏற்படக் காரணம் என்ன?”

“சன் டிவி ‘செல்லமே செல்லம்’தான் தொகுப்பாளராக என் கடைசி நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சி 2015-ம் ஆண்டு முடிஞ்சது. மூணு வருஷமாச்சு. இந்த இடைப்பட்ட காலத்தில் குடும்பம், பயணம் என எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயங்கள்ல கவனம் செலுத்தினேன். பொதுவா வாழ்க்கை என்பதே பயணம்தான். சந்தோஷம், துக்கம் என எந்தக் கடந்த நிகழ்வுகளும் திரும்ப வராது. அதனால் ஒவ்வொரு நிமிஷத்தையும் அர்த்தமுள்ளதா அமைச்சுக்கிட்டேன். பழைய மெட்ராஸின் நிலை உள்பட ஐந்து புத்தகங்களை எழுதினேன். சில ஸ்போர்ட்ஸ் சேனல்களில் வர்ணனை செய்தேன். மறுபடியும், திரைக்கு முன்னாடி வரலாம்னு முடிவெடுத்தேன். இம்முறை கொஞ்சம் வித்தியாசமா ஆரம்பிப்போம்னு நினைச்சேன். ‘வாணி ராணி’ வாய்ப்புக் கிடைச்சது. நடிப்பில் களமிறங்கிட்டேன்.”

 

“நடிப்பு அனுபவம் எப்படி போகுது?”

“ரொம்பவே சூப்பர் அனுபவம். ‘வாணி ராணி’ சீரியல் அல்ரெடி ஹிட். கதையில் புதிய திருப்பமாக என் கதாபாத்திரம் வருகை. நடிகர் பப்லுவின் துணைவியாக, ‘கோகிலா’ என்கிற கேரக்டரில் வர்றேன். நெகட்டிவ் ரோல்ல புதிய பரிமாணம். ராதிகா மேடம், பப்லு சார், நளினி மேடம் உள்ளிட்ட பலரும் சீனியர். ஆனா அந்த எண்ணமே இல்லாமல் இயல்பா பழகி, என்னுடன் ஒத்துழைக்கிறது சந்தோஷமா இருக்கு.”

“20 வருஷத்துக்கும் மேலாகியும் மீடியாவில் தொடரும் அனுபவம் பற்றி…”

“ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒவ்வொரு அனுபவம். ஸ்கூல் படிச்சுகிட்டிருந்த சமயத்தில் ராஜ் டிவியின் ‘சூப்பர் 6’ நிகழ்ச்சி மூலமா தொகுப்பாளரா என் பயணம் ஆரம்பிச்சது. கல்லூரி படிக்கும்போது, அதே ராஜ் சேனலில் ‘சூப்பர் காமெடி’ நிகழ்ச்சி. அடுத்து, விஜய் டி.வி-யில் ஜேம்ஸ் வசந்தனுடன் இணைந்து, ‘பிரேக் ஃபாஸ்ட்’ நிகழ்ச்சியை மூணு வருஷம் தொகுத்து வழங்கினேன். ‘ஹலோ தமிழா’, ‘சமையல் சமையல்’, ‘ஜில்லுனு ஒரு ஜோடி’, ‘ஜில்லுனு ஒரு சேலஞ்ச்’ எனப் பல நிகழ்ச்சிகள். சன் டி.வி-யின் ‘ராணி மகாராணி’, ‘செல்லமே செல்லம்’ நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியராக இருந்தேன். பிக் எஃப்.எம் வழங்கிய ‘பிரேக் ஃபாஸ்ட்’ ஷோவிலும் வொர்க் பண்ணினேன். 20 வருஷத்துக்கும் மேலாகப் பயணித்திருப்பதை நினைச்சா மகிழ்ச்சியாக இருக்கு.”

“நீங்க பேசும் தமிழ் ரொம்பத் தனித்துவமா இருக்கு. அதுக்கு ஸ்பெஷல் காரணம் ஏதாவது உண்டா?”

“நானும் தமிழ்ப் பெண் என்கிற ஒரு சிறப்புப் போதுமே. பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். படிச்சது எம்.ஏ., இங்கிலீஷ். பள்ளியில் தமிழ் படிக்கலைன்னாலும், இயல்பிலேயே தமிழ் மொழி மீது பெரிய பற்று இருந்துச்சு. நிறைய தமிழ்ப் புத்தகங்களையும், தமிழ் சார்ந்த விஷயங்களையும் தேடிப் படிச்சேன். எனக் கணீர் குரலில் பேசும்போது வித்தியாசமாவும் தெளிவாகவும் கேட்கும். அது, பார்வையாளர்களிடம் எளிதாகப் போய்ச் சேர்ந்தது. மேடையில் ஆங்கிலம் கலக்காமல் என்னால் பலமணி நேரம் பேச முடியும். எங்கே போனாலும் ஒரு தமிழராக, தமிழ்ப் பேசுவதில் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி. ஆனால், தமிழராக இருந்தும் பலரும் சரியா தமிழ்ப் பேசத் தெரியாமல் திணறுவதும், தமிழைப் பேசத் தயங்குவதும் ரொம்பவே வருத்தமா இருக்கு.”

“உங்க தொகுப்பாளர் பயணத்தில் ‘ராணி மகாராணி’ நிகழ்ச்சி ஸ்பெஷலானது. அந்த அனுபவம் பற்றி…”

“சன் டி.வி-யின் அந்த நிகழ்ச்சி, மூணு வருஷம் ஒளிபரப்பாச்சு. மிகச் சிறப்பான டீம். ‘100 % லேடீஸ் ஷோ’ என்பதுதான் நிகழ்ச்சியின் டேக் லைன். பெண்களுக்கான வித்தியாசமான கேம் ஷோ. பெரிய வெற்றி கிடைச்சது. பொதுவா, என் நிகழ்ச்சிகளின் நோக்கத்தைத் தெரிஞ்சுக்கிட்டு, அதை மக்களிடம் வெற்றிகரமா கொண்டுபோகத் தேவையான எல்லா வேலைகளையும் நானே செய்வேன். அப்படி என் பொறுப்பை உணர்ந்து எல்லா நிகழ்ச்சிகளிலும் வொர்க் பண்ணியிருக்கேன். ஆனால், இன்றைக்குப் பல தொகுப்பாளர்கள், நிகழ்ச்சியின் நோக்கத்தை முழுமையாப் புரிஞ்சுக்காமல் ஸ்கிரிப்டை மட்டும் வாங்கிப் படிச்சுட்டு, காதில் ஒலிக்கும் ஆடியோவைக் கேட்டு வொர்க் பண்றாங்க. அதில் உயிர்ப்பும் முழுமையும் இல்லை. முழு பங்களிப்பைக் கொடுத்து வேலை செய்யும்போதுதான் மக்கள் மனசில் நெடுங்காலம் இடம்பிடிக்க முடியும்.”

“ஷூட்டிங் ஸ்பாட்ல மத்தவங்களுக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்திருக்கீங்களா?”

“நான் இந்தத் துறைக்கு வந்தது முதல், சக தொகுப்பாளர்கள், நடிகர்கள் யாராச்சும் தமிழில் பேச சிரமப்பட்டாலோ, பிழையாகப் பேசறதைப் பார்த்தாலோ உடனே அவங்களை அணுகி, உதவி செய்வேன். நம்மைச் சார்ந்தவங்க சிறப்பா தமிழ்ப் பேசினால், அதில் எனக்கும் பெருமைதானே.”

“ஆங்கரிங்… ஆக்டிங்… எது ரொம்பப் பிடிச்சதா இருக்கு?”

“நிச்சயமா ஆங்கரிங்தான். அந்தப் பணியை ஆரம்பகாலத்திலிருந்து இன்றுவரை ரொம்பவே காதலிக்கிறேன். என் முழு ஈடுபாட்டையும் அதுக்குக் கொடுத்திருக்கேன். இப்போ ஆக்டிங்கையும் காதலிக்க ஆரம்பிச்சிருக்கேன். நல்ல சினிமா வாய்ப்புகள் வந்தால் படங்களிலும் ஆக்டிவா நடிக்கத் தயார்.”

“உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்களேன்…”

“மூணு நாய்க்குட்டி, ரெண்டு பூனைக்குட்டி வளர்க்கிறேன். இந்தச் செல்லங்கள்தான் என் குழந்தைகள். என் வீட்டில் பல வருஷமாக வேலை செய்யும் செல்வி அக்கா மற்றும் அவரின் பிள்ளைகளும் என் குடும்பம். நிறைய படிப்பு, எழுத்து, தமிழ் சார்ந்த பணிகள், துப்பாக்கிச் சுடுதல், உடற்பயிற்சி என ஒவ்வொரு நாளிலும் என் மல்டி டாஸ்க் செயல்பாடுகளை வித்தியாசமாக அமைச்சுக்கிறேன். முன்புபோல தொடர்ந்து மீடியாவுல அதிகம் பயணிக்க ஆவலாயிருக்கேன்” எனப் புன்னகைக்கிறார் மமதி சாரி.