படகுகளில் வருவோரை தடுக்க அவுஸ்திரேலியா அதிரடி நடவடிக்கை!

அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக படகுகளில் வருவோரை தடுப்பதற்கு புதிய யுக்தி ஒன்றினை அவுஸ்திரேலியா கையாளவுள்ளது.

கடல் எல்லையைப் பாதுகாக்கும் நோக்கில் Triton drones என்று பெயரிடப்பட்டிருக்கும் ஆளின்றி பறக்கும் அதிநவீன போர் விமானங்களை அவுஸ்திரேலிய அரசு வாங்கவுள்ளது.

இந்த ஆளின்றி பறக்கும் அதிநவீன போர் விமானத்தின் மூலம் புகலிடம் கோருவோரை ஏற்றிவருத் படகுகள் அவுஸ்திரேலிய கடல் எல்லைக்குள் வரும் முன்பே கண்டறிந்துவிட முடியும் என கூறப்படுகிறது.

அமெரிக்காவின் ஆயுத மற்றும் வான்வழி போர் தளபாடங்களை தயாரிக்கும் Northrop Grumman Corporation எனும் நிறுவனத்திடமிருந்து அவுஸ்திரேலியா அரசு வாங்கவுள்ளது.

இதற்காக ஏழு பில்லியன் டொலர் ($7 billion) செலவில் ஆறு Triton drones போர் விமானங்களை வாங்க இருப்பதாகவும் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிக்கொண்டு பறக்கும் போயிங் விமானம் போன்று பெரிய இறகுகளுடன் Triton drones ஆளின்றிப்பறக்கும் இந்த விமானம் பயணிக்க கூடியது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தரை இறங்காமல் 24 மணி நேரம் தொடர்ந்து பறக்க இயலும் என்றும், அறுபதாயிரம் (60,000 feet) அடி உயரத்தில் இது பறக்கும் எனவும் கூறப்படுகிறது.