அவுஸ்திரேலிய தமிழ்க் குடும்பத்தின் நாடுகடத்தல் உறுதி!

அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தலை எதிர்நோக்கியிருந்த நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தின் நாடுகடத்தலைத் தடைசெய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாமில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சம் கோரி அவுஸ்திரேலியா வந்த நடேசலிங்கம்-பிரியா தம்பதி மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் 2 வயது மற்றும் பத்துமாத குழந்தைகள் பல காலமாக குயின்ஸ்லாந்தின் Biloela-வில் வாழ்ந்து வந்தனர்.

இவர்களுடைய bridging visa கடந்த தை – மாசி மாதமளவில் காலாவதியாகியிருந்தது. இதனை அடுத்து நாடு கடத்தப்படும் நோக்கில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தின் நாடு கடத்தலை எதிர்த்து பல்வேறு பேரணிகள் நடைபெற்றது.

மேலும் நாடுகடத்தலை தடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கடந்த மாதம் நடைபெற்றிருந்தநிலையில் இவ்வழக்கின் மீதான தீர்ப்பை Federal Circuit நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நடேசலிங்கம் – பிரியா குடும்பத்தின் நாடுகடத்தலைத் தடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை நிராகரித்துள்ளது.

இதன் காரணமாக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் விரைவில் நாடுகடத்தப்படலாம் என அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.