வடகொரிய அதிபரிடம் எனது தனிப்பட்ட மொபைல் எண்ணை கொடுத்துள்ளேன்! -டிரம்ப்

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்பு, சிங்கப்பூரில் ஜூன் 12–ந் திகதி நடந்தது.

இந்த சந்திப்பு இணக்கமான முறையில் நடந்தது. முதலில் நேருக்கு நேரும், பின்னர் தூதுக்குழுவினருடனும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இரு தலைவர்களும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர்.

இந்த சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று வாஷிங்டனில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘கிம் ஜாங் உன்னுடன் நடந்த சந்திப்பு மிக முக்கியமானது. இந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்தது. கருத்து வேறுபாடுகளை களைய ஏதுவாக இருந்தது.

எனது தனிப்பட்ட மொபைல் எண்ணை கிம்மிடம் தந்துள்ளேன். சர்வதேச பிரச்சினைகள் உட்பட எதுவாக இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள் என கூறியுள்ளேன். எனவே வட கொரியாவிடம் இருந்து புதிய செயல்பாட்டை எதிர்பார்க்கிறேன். இதன் மூலம் உலக நாடுகளுக்கும் நன்மை பயக்கும்’’ என ட்ரம்ப் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை யாரிடம் நீங்கள் பேச உள்ளீர்கள் என டிரம்பிடம் கேட்ட போது, வடகொரிய மக்களுடன் நான் பேசப்போகிறேன். வடகொரியாவில் இருக்கும் எனது மக்களுடன் நான் பேச உள்ளேன்” என்று கூறினார். ஆனால், இது பற்றி விளக்கமாக எந்த தகவலையும் டிரம்ப் கூறவில்லை.