ஆஸ்திரேலியாவில் மொத்த சொத்துக்களையும் ஏழைகளுக்கு தானமாக வழங்கிய கோடீசுவரர் மரணம்!

ஆஸ்திரேலியாவில் தொழில் மற்றும் வர்த்தகத்தில் தனக்கான முத்திரை பதித்து வளர்ச்சி கண்டவர் இளம் வயது கோடீசுவரர் அலி பானட். இவரது ஆடம்பரமான வாழ்க்கைமுறை பல நேரங்களில் செய்தியாகவும் வெளிவந்ததுண்டு.இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவ சோதனையில் இவருக்கு புற்று நோய் தாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இது அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டது. மட்டுமின்றி அடுத்த 7 மாதங்களில் மரணம் ஏற்படலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.இந்த நிலையில் தமது சொத்துக்கள் முழுவதையும் ஏழைகளுக்கு தானமாக வழங்க விரும்பிய அலி பானட், உடனடியாக அதற்கான பணியிலும் ஈடுபட்டார்.

அது மட்டுமின்றி தமது நிறுவனங்கள் அனைத்தையும் விற்பனைக்கும் வைத்தார். மேலும் தமது ஆடம்பர கார்கள், விலை உயர்ந்த வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தையும் விற்று அதில் சேகரித்த மொத்த பணத்தையும் தானம் செய்துள்ளார்.பின்னர் ஆப்பிரிக்காவின் தோகோ நகருக்கு சென்ற அவர் அங்கு இஸ்லாமிய பள்ளிவாசல் ஒன்றை கட்டி, உள்ளூர் சிறார்களுக்கு என பாடசாலை ஒன்றையும் நிறுவினார்.

தோகோவில் தங்கியிருந்த காலகட்டத்தில் அறக்கட்டளை ஒன்றை நிறுவிய பானட், இயலாதவர்களுக்கு உதவும் நோக்கில் அதை விரிவு படுத்தவும் தமது நண்பர்களுக்கு கோரிக்கை வைத்தார். மட்டுமின்றி தமது அறக்கட்டளையின் மூலம் 200 ஆதரவற்ற விதவைகளுக்கு தங்கும் இல்லம் ஒன்றை எழுப்பவும், 600 ஆதரவற்ற சிறுவர்களுக்கான பாடசாலை மற்றும் மருத்துவமனை ஒன்றை நிறுவவும் ஏற்பாடு செய்தார். இவரது நல்ல நோக்கம் கருதி பலர் நிதி உதவியும் அளித்துள்ளனர். தற்போது வரை இவரது அறக்கட்டளையில் சுமார் 736,000 பவுண்ட்ஸ் நிதி திரட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 7 மாதங்கள் மட்டுமே உயிர் வாழ்வார் என மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில் அலி பானட் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழ்ந்து தமது 32-வது வயதில் மரணமடைந்துள்ளார்.